பெரும் குளறுபடி: ராகுல் காந்தி உயிருக்கே ஆபத்து! 2 பிரதமர்களை இழந்துட்டோம்! பாதுகாப்பு கேட்கும் காங்
டெல்லி: பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, டெல்லியை கடந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு செல்ல இருப்பதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் எழுதி உள்ள கடிதத்தில், டெல்லியிலேயே 3 இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
தற்போது 108 வது நாளாக நடைபயணத்தில் ஈடுபட்டு வரும் அவர், தலைநகர் டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இன்னும் அவர் இலக்கை அடைய 448 கிலோ மீட்டர்கள் தூரம் உள்ளது.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பயணம்
46 மாவட்டங்கள், 9 மாநிலங்களில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபணம் சென்று ஸ்ரீநகரில் தன்னுடைய யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். இந்த நிலையில் அடுத்து அவர் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பவன் கெரா வலியுறுத்தி உள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு தேவை
இதுகுறித்து பேசிய அவர், "ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் டெல்லி வந்தபோது அவரை சுற்றி கயிறு கட்டப்படவில்லை. நாங்கள் இப்போது பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு செல்ல இருக்கிறோம். அவை எல்லாம் பதற்றம் நிறைந்த பகுதிகள். இதனை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

பாதுகாப்பு மீறல்
இந்த கட்சி ஏற்கனவே 2 பிரதமர்களை இழந்து நிற்கிறது. ராகுல் காந்தியின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறோம்." என்றார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எழுதப்பட்டு உள்ள கடிதத்தில், சோஹ்னாவில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

உள்ளே புகுந்த மர்ம நபர்கள்
யாத்திரையில் ஈடுபட்டவர்கள் தங்கிய கண்டெய்னர்களில் சம்பந்தமே இல்லாமல் அனுமதிக்கப்படாத நபர்கள் புகுந்தார்கள். அவர்கள் பிடிபட்டபோது கழிப்பறைக்கு சென்றதாக கூறினார்கள். ஆனால், கழிப்பறை வெளியில்தான் இருந்தது. அதன்பிறகுதான், உள்ளே புகுந்தவர்கள் காவல்துறையினர் என்று தெரிந்தது.

டெல்லியிலேயே பாதுகாப்பு இல்லை
டெல்லியில் பல தருணங்களில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் டெல்லி காவல்துறை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தியை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க தவறிவிட்டது.

2 பிரதமர்கள் மரணம்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய 2 பிரதமர்கள் நாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டிற்காகவும் உயிர் தியாகம் செய்து உள்ளார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த மாநில தலைவர்களும் நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்." என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications