நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து... உச்சத்தில் சர்வாதிகாரம்... சோனியா காந்தி சாடல்!!
டெல்லி: நாட்டில் தேசத்திற்கு எதிரான மற்றும் ஏழைகளுக்கு எதிரான சக்தி வன்முறைகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஜனநாயகத்தில் சர்வதிகாரப்போக்கு செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புதிய சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு நவ ராபூரில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். அப்போது, ''நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். மோசமான எண்ணங்கள் நாட்டை சூழ்ந்து கொண்டுள்ளது. சுதந்திரமான பேச்சுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நிறுவனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் வளர்ச்சிப் பாதையை தடம் புரட்டுவதற்கான முயற்சிகள் முன்பு நடந்தது. தற்போது, ஜனநாயகத்துக்கு சவால்கள் எழுந்துள்ளது. நமது நாடு இன்று திக்கு தெரியாமல் நிற்கிறது. நாட்டில் தேசத்திற்கு எதிரான மற்றும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சியாளர்கள் இன்று வன்முறையை தூண்டுகின்றனர். துவேசம் பரப்புகின்றனர். வன்முறை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். நாட்டின் குரலை முடக்குவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.
நமது நாட்டின் இளைஞர்கள், பழங்குடியினர், பெண்கள், விவசாயிகள், கடைக்காரர்கள், சிறிய வர்த்தகர்கள், ராணுவ வீரர்கள் என்று அனைவரும் தங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடு 75 -வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது.
நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் முதல் சபாநாயகர் வி. மாவ்லங்கர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் நமது நாட்டின் சுதந்திரம் இக்கட்டான சூழலை சந்திக்கும் என்றும் ஜனநாயகம் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் என்றும் ஒரு நாளும் நினைத்து இருக்க மாட்டார்கள். இன்று சட்டசபைக்கு அடிக்கல் நாட்டும் விழாவை முன்னிட்டு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் ஆட்சியில் இருக்கும் வரை வரிசையில் இறுதியாக நிற்கும் ஆட்களின் நலன் வரை அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டிடங்களால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட மாட்டாது. உணர்வுகளால் மட்டுமே பாதுகாக்கப்படும்'' என்றார்.
இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் சபாநாயகர் சரண் தாஸ் மஹந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications