கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி!
டெல்லி : கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்துள்ளது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கோவாக்சினுக்கு அவசர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் உருவாக்கும் கொரோனா வேக்சின்களுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்து வருகிறது. ஒரு வேக்சினின் டேட்டாக்களை ஆராய்ந்து, அது அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து இருந்தால் உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளிக்கும்.
மாடர்னா, கோவிஷீல்ட், ஃபைசர் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு வேக்சின்களுக்கு உலக சுகாதார மையம் அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தியாவின் கோவாக்சினுக்கு அவசர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

மறுத்து வந்தது
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் கோவாக்சின் தயாரிக்கப்பட்டு உலக சுகாதார மையத்தின் அவசர அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் அவசர அனுமதிக்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால் உலக சுகாதார மையம் கடந்த 8 மாதங்களாக கோவாக்சினுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

அனுமதி
போன மாத இறுதி வரை 4 முறை மீட்டிங்குகள் நடந்த நிலையில் கோவக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை. வேக்சினுக்கான அவசர அனுமதி என்பது அதன் திறன், பாதுகாப்பு, தரம், ஒவ்வொரு நாட்டு இனக்குழு மக்களிடம் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து வழங்கப்படும். இந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் ஒரு வேக்சின் நிறுவனம் உலக சுகாதார மையத்திடம் தரவுகளை வழங்க வேண்டும். ஆனால் பாரத் பயோடெக் இதில் சில டேட்டாக்களை வழங்கவில்லை.

டேட்டா
இதனால் கூடுதல் டேட்டா கேட்டு உலக சுகாதார மையம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த இரண்டு மீட்டிங்குகளில் பாரத் பயோடெக் கோவாக்சின் குறித்த கூடுதல் டேட்டாக்களை உலக சுகாதார மையத்தில் தாக்கல் செய்தது. கடந்த வாரம் கூடுதலாக மேலும் ஒரு டேட்டாவை தாக்கல் செய்தது. இது கோவாக்சின் எடுப்பதால் வர கூடிய ரிஸ்க் தொடர்பான டேட்டா விவரங்கள் ஆகும்.

இன்று மீட்டிங்
இதையடுத்து இன்று கோவாக்சினுக்கு அனுமதி தருவது தொடர்பான 5வது மீட்டிங் நடத்தப்பட்டது. உலக சுகாதார மையம் நடத்திய மீட்டிங்கில் ஒருவழியாக இன்று கோவாக்சின் வேக்சினுக்கு அவசர அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்து டேட்டாக்களும் வழங்கப்பட்ட காரணத்தால் கோவக்சினுக்கு அவசர அனுமதி அளித்து உலக சுகாதார மையம் உத்தரவிட்டுள்ளது.

முக்கியம்
உலக சுகாதார மையம் வழங்கும் இந்த அனுமதியை பொறுத்தே உலக நாடுகள் ஒரு நாட்டின் வேக்சினை அனுமதிக்கும். இந்த அவசர அனுமதி பெற்றால் மட்டுமே விசா பெறுவது, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது போன்ற நடைமுறைகளை செயல்படுத்த முடியும். தற்போது கோவக்சினுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட மனித சோதனைகளில் கோவக்சினுக்கு 77.8% நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும், டெல்டாவிற்கு எதிராக 65.2% எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications