10 வருடம் வரை சிறை.. தனியார் கிரிப்டோகரன்சி வைத்திருந்தால் சிக்கல் - கிரிப்டோ மசோதா சொல்வது என்ன?
டெல்லி: தனியார் கிரிப்டோகரன்சியை வாங்குவதும், விற்பதும், அதில் முதலீடு செய்வதும், அதை வைத்து பொருட்கள் வாங்குவதும் மத்திய அரசின் கிரிப்டோகரன்சி மசோதா மூலம் தடை செய்யப்படுகிறது. இதை மீறி கிரிப்டோகரன்சியை பயன்படுத்துவது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு சமமான குற்றமாகும்.
இதற்கு 10 வருடம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மத்திய அரசின் கிரிப்டோகரன்சி வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை சில கிரிப்டோ கரன்சிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க 3500க்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் டாலரை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது.
காயின்ஸ், டோக்கன்ஸ், அதற்கான வர்த்தகம் என்று கிரிப்டோ கரன்ஸி உலகமே தனி. இந்தியாவில் இப்போதுதான் கிரிப்டோ கரன்ஸி முதலீடு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. ஆனால் இதை வைத்து மோசடி செய்யவும் ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.
ராமதாஸ் ஆரம்பத்துல எப்படி இருந்தார் தெரியுமா.. கால் தவறியது எங்கே.. திருமாவளவன் ஆவேச பேச்சு
பொய்யான கிரிப்டோ கரன்சி
பொய்யான கிரிப்டோ கரன்சி உருவாக்கம். அதிக லாபம் தரும் முதலீடு என்று கூறி வெளியாகும் பொய்யான விளம்பரங்கள், பணம் பதுக்கல், கருப்பு பணத்தை வெள்ளையாக்க கிரிப்டோ கரன்சி முதலீட்டை பயன்படுத்துவது என்று கிரிப்டோ கரன்சி உலகத்திற்கு இன்னொரு மோசமான பக்கமும் உள்ளது. இதன் காரணமாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று ஆர்பிஐ தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
சீனா
சீனா, சவுதியில் கிரிப்டோ கரன்சி தடை உள்ளது. ஜப்பான், கனடா, ஸ்விஸ் போன்ற நாடுகளில் கிரிப்டோ கரன்சி தொடர்பான ஒழுங்கு முறை விதிகள் உள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்காமல் தடுப்பதற்கான மணி லாண்டரி விதிமுறைகள் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக இந்த நாடுகளில் உள்ளது. இதைத்தான் ஆர்பிஐயும் அதன் கவர்னர் சக்திகாந்த் தாஸும் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.
ஆர்பிஐ
இதையடுத்து சமீபத்தில் கிரிப்டோ கரன்சி தொடர்பான ஒழுங்கு முறை விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. கிரிப்டோகரன்சி குறித்த நாடாளுமன்ற கமிட்டி அமர்வு இதற்காக விவாதம் செய்தது. மசோதா கொண்டு வரலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு கடைசியில் இதற்காக வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. பாஜக எம்பி ஜெயந்த் சின்கா தலைமையிலான இந்த அமர்வு ஆலோசனையை மேற்கொண்டது. கடந்த 16ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கிரிப்டோகரன்சிகளை மொத்தமாக ஒழிக்க முடியாது. அதனால் இதில் ஒழுங்குமுறையை கொண்டு வர வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
வரைவு மசோதா
அதை தொடர்ந்து இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்ஸியை கட்டுப்படுத்தும் வரைவு மசோதா ( The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021,) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று அமைச்சரவை முன் விவாதத்திற்கு வரும் இந்த வரைவு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கான ஒப்புதலை பெறும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
மசோதா என்ன சொல்கிறது
இந்த வரைவு மசோதா சொல்லும் விஷயம் எளிதானது.. தனியார் கிரிப்டோகரன்சிகளை மக்கள் இந்தியாவில் ஒரு பணமாக பயன்படுத்த முடியாது. டிஜிட்டலில் இருந்தாலும் இதை பணமாக பயன்படுத்த முடியாது. இதை மத்திய அரசு தடை செய்கிறது. தனியார் கிரிப்டோகரன்சியை வாங்குவதோ, விற்பதோ, அதில் முதலீடு செய்வதோ, அதை வைத்து பொருட்கள் வாங்குவதோ தடை செய்யப்படுகிறது. அதன்படி பல்வேறு தனியார் கிரிப்டோ கரன்சிகள் தடை செய்யப்படவும், சில கரன்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் உள்ளது. ஆர்பிஐ மூலம் ஒழுங்குப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கரன்சி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தற்கான அடிப்படை திட்டத்தை வகுக்கும் வகையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
கட்டுப்பாடு
அதாவது ஆர்பிஐ ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். அதே சமயம் கிரிப்டோகரன்சி தொழில்நுட்ப பயன்பாடு, அதில் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மேலும் வெளிநாடுகளில் அனுமதி அளிக்கப்பட்ட கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதி அளிக்கப்படும். உதாரணமாக அமெரிக்கவில் பிட்காயின் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவில் பிட்காயின் அமெரிக்க நாட்டின் ஒரு பணமாக கருதப்படும் (ஆனால் டாலராக அல்ல). வெளிநாடுகளில் அனுமதிக்கப்படும் பணத்திற்கு இந்தியாவில் வெளிநாட்டு பணம் என்ற அளவில் மட்டும் இந்த மசோதா அனுமதி அளிக்கும். இதனால் சில கிரிப்டோகரன்சிகளுக்கு முழு தடை விதிக்கப்படாது.
கிரிப்டோகரன்சிகளுக்கு தடை?
இந்த மசோதா வரைவு மசோதா என்பதால் அதில் சில மாற்றங்கள் தாக்கல் செய்யப்படும் முன் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த கிரிப்டோகரன்சி மசோதா மூலம் தனியார் கிரிப்டோகரன்சியை வாங்குவதோ, விற்பதோ, அதில் முதலீடு செய்வதோ, அதை வைத்து பொருட்கள் வாங்குவதோ தடை செய்யப்படுகிறது. இதை மீறி செய்வது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு சமமான குற்றம். அதாவது மணி லாண்டரிக்கு சமமான குற்றம். இதற்கு 10 வருடம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று இந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
10 வருடம்
இந்த மசோதா சட்டமாகி 90 நாட்களில் ஒருவர் தங்களிடம் இருக்கும் கிரிப்டோகரன்சி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். இல்லையென்றால் இது குற்றமாக கருதப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பல கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் குற்றப்பிரிவுகளுக்கு 7 வருடம் முதல் 10 வருடம் வரை சிறை தண்டனை தரப்படுகிறது. அதற்கு இணையான தண்டனை கிரிப்டோகரன்சி குற்றங்களுக்கும் வழங்கப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.