‛‛கையை’’ வெட்டி ‛‛தலை’’யை துண்டியுங்க.. டெல்லி விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் சர்ச்சை பேச்சு-பரபரப்பு
டெல்லி: ‛‛உங்களை தாக்க வரும் நபர்களின் கையை வெட்டி தலையை துண்டியுங்க..'' என டெல்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் பிரமுகர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் சில அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். அதேபோல் சில அரசியல் கட்சி பிரமுகர்களும் சரவெடியாக சில கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
இத்தகைய சர்ச்சைகள் சமீப காலமாக இந்தியாவில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதுதொடர்பான விவாதங்களில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தலையை துண்டிக்க வேண்டும்
இதற்கு மத்தியில் டெல்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி சென்றனர். இதில் ஏராளாமனவர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியில் அந்த அமைப்பின் பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். பேரணியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஜகத் குரு யோகேஷ்வர் ஆச்சார்யா பேசினார். அப்போது அவர், ‛‛மக்களை தாக்குபவர்களின் தலையை துண்டிக்கவும், கைகளை வெட்டவும் தயங்க கூடாது. இதற்கு அதிகபட்ச தண்டனையாக சிறைக்கு தான் செல்வீர்கள். இருப்பினும் சில விஷமிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இவர்களை அடையாளம் கண்டு தாக்க வேண்டும்'' என்றார்.

துப்பாக்கி வைத்து கொள்ளுங்கள்
இந்த பேரணியில் மஹந்த் நவல் கிஷோர் தாஸ் என்பவர் பேசுகையில், ‛‛ துப்பாக்கிகளை உரிமத்துடன் அல்லது உரிமம் இன்றி மக்கள் பெற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களை கொல்ல வருபவர்களிடம் இருந்து உங்களை காத்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் டெல்லி போலீஸ் கமிஷனர் கூட நமக்கு டீ வழங்குவார். நாம் விரும்பியதை செய்யட்டும் எனவும் கூறுவார்'' என பேசி சர்ச்சையை கிளப்பினார்.

சர்ச்சையால் விளக்கம்
இவர்கள் 2 பேரின் பேச்சுக்களும் சர்ச்சையான நிலையில் இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், ‛‛ இது ஜன் ஆக்ரோஷ் பேரணி. இவர்களின் பேச்சு என்பது ஜிஹாதிகளுக்கு எதிரானது தான். மாறாக அவர்கள் குறிப்பிட்ட எந்த சமூதாய மக்களையும் நோக்கி இத்தகைய கருத்துகளை கூறவில்லை'' என்றார்.

காரணம் என்ன?
டெல்லியில் சமீபத்தில் 25 வயது நிரம்பிய மணீஷ் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மணீஷ் காசிம் மற்றும் முஹ்சீன் ஆகியோர் செல்போன் பறித்தனர். இதுபற்றிய புகாரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் மணீஷ் நீதிமன்றத்தில் சாட்சியமும் அளித்தார். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் மணீஷ் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications