சைபர் தாக்குதல்: இந்திய கல்வி நிறுவனங்களை குறி வைக்கும் ஹேக்கர்கள் - வாரத்திற்கு 5,196 திருட்டு
இந்தியக் கல்வித் துறை கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான சைபர் தாக்குதல்களை சந்தித்துள்ளதாக செக் பாயின்ட் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி: இந்தியக் கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறைதான் கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான சைபர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வுகளை நடத்திய செக் பாயின்ட் எனும் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொழில் நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அதைப்பயன்படுத்தி இணைய வழியில் திருடுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுபவது இந்திய கல்வித்துறைதான்.

காரணம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களால் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் மாணவர்களால் நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்து வருகின்றனர்.
பணிச்சூழலும் ஒர்க் ப்ரம் ஹோம் என்றாகி விட்டது. கல்வியிலும் வேலையிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது கொரோனா வைரஸ். நாடு முழுவதும் பல்வேறு கல்வி அமைப்புகளும், நிறுவனங்களுக்கும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கு ஏற்பத் தங்களின் கட்டமைப்பையும் மாற்றிக்கொண்டனர்.
இந்த கால கட்டத்தில் இந்திய கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி அதனுள் ஊடுருவி தகவல்களை திருடியுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த கால கட்டத்தில் அதிக சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன. சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வுகளை நடத்திய செக் பாயின்ட் எனும் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்திய கல்வித்துறையும் ஆராய்ச்சித்துறையும்தான் அதிகமான சைபர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளன. வாரத்துக்கு சராசரியாக 5,196 தாக்குதல்களைச் சந்தித்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சைபர் திருட்டுக்களைச் சந்தித்தது இல்லை.
செக் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவுக்கு அடுத்து கல்வித்துறையில் அதிகமான சைபர் தாக்குதல்களைச் சந்தித்தது இத்தாலி. இந்த ஆண்டின் முதல் பாதியில் அங்கு சைபர் தாக்குதல்கள் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. அடுத்ததாக இஸ்ரேலும், ஆஸ்திரேலியாவும் உள்ளன.
உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கல்வித்துறையும், ஆராய்ச்சித் துறையும்தான் அதிகமான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 94 சதவிகிதத் தாக்குதல்கள் இந்தத் துறைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
தெற்காசியாவில்தான் அதிகமான சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு ஆசியாவிலும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் நடப்பதாகவும் செக் பாயிண்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் கல்வித்துறை இணைய தளங்களிலும் சமீக காலங்களில் 149 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது கிழக்கு ஆசியாவில் 79 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த சைபர் தாக்குதல் குறித்து கருத்து கூறியுள்ள செக்பாயிண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் பாலசுப்ரமணியன், இந்திய கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் பாதுகாப்பு பெரியதாகப் பேணப்படுவதில்லை. கடினமான முறையில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தினால் இதுபோன்ற சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
இதுபோன்ற சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றுவது, வைரஸ் வராமல் தடுக்கும் மென்பொருள் பயன்படுத்துவது, தனியாரின் தகவல்களைப் பயன்படுத்தும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். இதன் மூலம் சைபர் தாக்குதலில் இருந்து நம்மைக் காக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications