சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதா? டி. ராஜா கண்டனம்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி. ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
போலீசாரின் இந்நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கி பதற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.
இப்போது குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் நாட்டில் கலவர சூழலை உருவாக்கிவிட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது வன்முறையை போலீசார் கட்டவிழ்த்துவிடுவது ஏற்க முடியாது. மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதை நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் நாங்கள் முறையிட உள்ளோம். மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் டிசம்பர் 19-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
இதேபோல் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசு தற்போது மாணவர்களையும் தாக்கியுள்ளது. அரசியல் சாசனத்தை பாதுகாக்க போராடுவோம். இந்த அரசுக்கு எதிராக போராடுவோம் என்றார்.