கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடிய அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா இந்த அளவுக்கு குறைய காரணம் மருத்துவர்கள் மட்டும்தான்.

மருத்துவர்கள் அர்ப்பணிப்பு
மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையே கொரோனா குறைய மிகப்பெரும் காரணம். இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி கொரோனா முதல் அலையில் பணியில் ஈடுபட்டிருந்த 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். கொரோனா 2-வது அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளது.

பாரத ரத்னா வழங்கணும்
இந்நிலையில் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஒரு" இந்திய மருத்துவருக்கு "வழங்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இதன் மூலம் நான் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் குறிக்கவில்லை.

தன்னலமற்ற சேவை
கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். லட்சக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி கவலைப்படாமல் தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்தனர்.

உண்மையான கவுரவம்
அவர்களை கவுரவிக்கவும், நன்றி சொல்லவும் இதைவிட சிறந்த வழி என்ன? இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications