டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போனில் கொலை மிரட்டல்.. ஒரே பரபரப்பு.. போலீஸ் அதிரடி!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று இரவு போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திய போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் மிரட்டல் விடுத்த நபரை பிடித்து விசாரித்தனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். சமீபத்தில் டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக கடந்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. குஜராத் சட்டசபை தேர்தலிலும் 5 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. வரும் கர்நாடகா சட்டசபை தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி சாதிக்கும் முனைப்பில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இதற்கான பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று நள்ளிரவு 12.05 மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த நபர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை உடனடியாக துண்டித்துள்ளார். இதுபற்றி உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 38 வயது நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் டெல்லி கேட் பகுதியில் குருநானக் கண் மையத்தின் உள்ள நர்சிங் பிரிவில் ஊழியராக பணியாற்றியது தெரியவந்து. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி குலாபி பாக்கில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ஹர்ரிந்தர் சிங் கூறுகையில், ‛‛நள்ளிரவு 12.05 மணிக்கு மிரட்டல் போன் வந்தது. உடனடியாக விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக உள்ளார். இதனால் கைது செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.