வேகம் காட்டும் ஸ்டாலின்.. உடனே டெல்லியில் இறங்கிய திமுக.. ஜனாதிபதியை சந்திக்க தீவிரம்.. என்னாச்சு?
டெல்லி : இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் சில நாட்களில் நேரம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு இந்தி மொழியை புகுத்துவதற்கான பரிந்துரைகளை அளித்துள்ள நிலையில், வேக வேகமாக ஆக்ஷனில் இறங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் மீதமுள்ள கட்சிகளுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வலியுறுத்த திமுக எம்.பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
‛‛சர்வாதிகாரம்’’.. ஆடு மாடுகளை போல் வண்டியில் ஏற்றிய போலீஸ்.. ஸ்டாலின் மீது கோபப்பட்ட ஜெயக்குமார்
அமித்ஷா குழுவின் பரிந்துரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளை குடியரசுத் தலைவரிடம் அளித்தது. அதில், ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உடனே தீர்மானம் கொண்டு வந்த திமுக அரசு
தமிழக அரசு உடனடியாக இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று கூடிய நிலையில் இரண்டாவது நாளான நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்
இந்தி திணிப்புக்கு எதிரான அந்த தீர்மானத்தில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
பரிந்துரைகளை ஏற்கக்கூடாது
ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றம்
முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆதரித்து பேசினார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுப் பேசினர். பாஜக சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன், முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்கவில்லை எனக் கூறி அவையில் இருந்து கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உடனே டெல்லியில்
தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் நேரம் கேட்டுள்ளனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் சில நாட்களில் நேரம் ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.