குரங்கம்மை மட்டும்.. தக்காளி காய்ச்சல், டெங்கு, ஜப்பான் காய்ச்சல்.. இந்தியாவில் பரவும் வேறு நோய்கள்
டெல்லி: உலகம் முழுவதும் தற்போதுதான் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றுடன் இந்த பேரழிவு பாதிப்புகள் முடிந்து விடாது என சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் தற்போது குரங்கம்மை தொற்று புதிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. குரங்கம்மை மட்டுமல்ல தக்காளி காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவை எதிர் வரும் பாதிப்புகளாக இருக்கின்றன.
கடந்த 2019 முதல் தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று சுமார் 63,82,183 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து விடுபட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது. இந்நிலையில் மனித இனத்திற்கு அதுவும் குழந்தைகளுக்கு புதிய அச்சுறுத்தலாக குரங்கம்மை உருவாகியுள்ளது.
இந்த குரங்கம்மை பாதிப்பு தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மையானது எலி, அணில் போன்ற கொறித்துண்ணி விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்பது, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரோடு நெருங்கிய தொடர்பு, கொப்புளங்களில் இருந்து வரும் நீர் கலப்பு ஆகியவற்றால் பரவுகிறது. முதல் முதலில் குரங்குகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
விலங்குகள் மற்றும் மனிதர்கள் என பாலூட்டிகளை தாக்கும் குரங்கு அம்மை, பெரியம்மை வகை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கம்மை வைரசால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கு இந்த குரங்கம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது நேற்று மேலும் ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென கேரளாவிலும் பரவும் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல்.. உத்தரப் பிரதேசத்திலும் பாதிப்பு.. ஆபத்தானதா?
டெங்கு
குரங்கம்மை தொற்றை கடந்து டெங்கு பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு முன்னர் வரை டெங்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 2017ல் மட்டும் இந்தியாவில் 1.88 லட்சம்பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020ல் ஏறத்தாழ 79 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு வெறும் 39,419 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அச்சம் மேலெழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீப நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குழந்தைகளை மட்டுமே தாக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வயதானவர்களும் இதனால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. புனே மட்டுமல்லாது கர்நாடகாவிலும் தெலங்கானாவிலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
அசாம் மாநிலத்தில் இந்த காய்ச்சல் பாதிப்பு புது அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 38 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நோய் தற்போது குழந்தைகளை பாதித்து வருகிறது. எனினும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நோயெதிர்ப்பு திறனை இழந்த வயதானவர்களையும் இது பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைவலி, காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருந்தாலும், அறிகுறிகளற்று இந்த பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டால் 4-14 நாட்கள் வரை உடல் நிலை தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகும் என்று சொல்லப்படுகிறது. தலைவலியில் தொடங்கும் இந்த காய்ச்சல் வாந்தி, வயிற்றுவலி, கழுத்து விரைப்பு, வலிப்பு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இறுதியில் உயிரிழப்பையும் இது ஏற்படுத்தும்.
Recommended Video
பன்றி காய்ச்சல்
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பரவலாக பன்றி காய்ச்சல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. H1N1 வைரஸ் காய்ச்சல் என அழைக்கப்படும் இந்த காய்ச்சலால் இதுவரை 142 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் கோலாப்பூரில் 2 பேரும், புனேவில் 3 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் தாக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்றாலும் பெரியவர்களையும் இந்த காய்ச்சல் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எச்1என்1 வைரஸ் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். இந்நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி காய்ச்சல்
இவ்வகை காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தக்காளி நிறத்தில் திட்டுகள் ஏற்படுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இவ்வகையான காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வகைக் காய்ச்சலால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, நீரிழப்பு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோய்க்கு நேரடியாக வைரஸ் கொல்லி மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு காய்ச்சல், வாய்ப்புண் மற்றும் நீர் இழப்பு போன்றவற்றை தடுக்க உகந்த சிகிச்சை நம்மால் வழங்கிட இயலும். அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் இந்தத் தொற்றின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் மீண்டு விடுவர்.
இப்படியான வைரஸ் மற்றும் தொற்று பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிந்த அளவு நீர் நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், வைட்டமின் சி மற்றும் இதர உயிர் சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.