'நிரந்தர தலைவர்’ விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்.. என்னாச்சு?
டெல்லி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 'அரசியல் கட்சிகள் எந்த ஒரு பதவிக்கும் யாரையும் நிரந்தரமாக தேர்வு செய்ய முடியாது என்றும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தேர்தல் ஆணையம் அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு அவரது மகன், ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்துள்ளார்.
கூட்டு வன்புணர்வு செய்த 5 பேர்.. ஆடையின்றி 2 கிமீ நடந்தே போன சிறுமி.. வேடிக்கை பார்த்த உ.பி மக்கள்
பொதுக்குழு கூட்டம்
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக கடந்த ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் இருந்து விலகியிருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி தாயார் ஒய்.எஸ் விஜய லக்ஷ்மி அறிவித்தார். தெலுங்கானாவில் கட்சி தொடங்கியிருக்கும் தனது மகள் ஒய்.எஸ் ஷர்மிளாவிற்கு உதவி தேவைப்படுவதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் விஜய லக்ஷ்மி அறிவித்தார்.
நிரந்தர தலைவராக
இதன்பிறகு, மறுநாள் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. அதில், அரசியல் கட்சிகள் எந்த ஒரு பதவிக்கும் யாரையும் நிரந்தரமாக தேர்வு செய்ய முடியாது. அப்படி செய்யும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் இந்த திருத்தங்களை முற்றிலும் நிராகரித்துவிடும்.
ஜனநாயகத்துக்கு எதிரானது
இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவது ஒட்டுமொத்தமாக பிற கட்சிகள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆணையத்தில் தற்போதைய விதிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில், இந்த நடவடிக்கை உள்ளது. இது ஜனநாயகத்திற்கும் எதிரானது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ''இந்த விவகாரம் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 5 முறைக்கும் மேலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அக்கட்சி பதிலளிக்கவில்லை. தாமதப்படுத்தும் இந்த செயல் ஊடகங்களில் வெளியான தகவலுக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது'' என்றும் தெரிவித்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் விளக்கம்
இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள விளக்கத்தில், ''தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டிய தவறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜூலை 2022 முதல் 2027 ஆம் ஆண்டு வரைக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நாங்கள் ஆணையத்திடம் தெரிவிப்போம். கட்சியின் பொதுக்குழுவில் ஜெகன் மோகன் ரெட்டியை நிரந்தர தலைவராக தேர்வும் செய்யும் வகையில் எந்த திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை'' என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய விதி
தேர்தல் ஆணைய விதிகளின் படி கட்சிகள் ஆயுள் காலத்திற்கும் நிரந்தரமாக தலைவரை தேர்வு செய்ய முடியாது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்சியின் அமைப்பு ரீதியாக தேர்வு செய்ய வேண்டும். கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல்களை நடத்தாவிட்டால் கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.