முதல்வர் பதவிக்கு மீண்டும் சிக்கலா? ஹேமந்த் சோரனுக்கு ஷாக் கொடுத்த ED.. ஜாமீனை எதிர்த்து அப்பீல்
டெல்லி: நில மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இதையடுத்து அவர் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்துள்ளது.
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான இவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

முன்னதாக தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தபடியே ஹேமந்த் சோரன் முதல்வ்ராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக இருந்த சாம்பாய் சோரன் பதவி விலகினார். முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், 5 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 45 பேர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிலையில், அமலாக்கத்துறை அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் சட்ட விரோதமானது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்து இருப்பதால் ஜார்க்கண்ட் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ஹேமந்த் சோரன் சட்ட சபையில் பேச தொடங்கியவுடன் பாஜக எஎம் எல் ஏக்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் அரசியலமைப்பை கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டி கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய ஹேமந்த் சோரன், மத்திய அமைப்புகளை பயன்படுத்தி தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சதி நடத்தப்படுகிறது. பணபலத்தை கொண்டு ஆபரேஷன் தாமரைக்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் என்று அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.க்களை சாடினார்.












Click it and Unblock the Notifications