அட்மிஷன் பீஸ் கட்ட லேட்: உ.பி. தலித் மாணவருக்கு சீட் வழங்க மும்பை ஐ.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கல்வி கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் சீட் மறுக்கப்பட்ட உ.பி. தலித் மாணவரை மும்பை ஐ.ஐ.டி. அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 17 வயது தலித் மாணவர் பிரின்ஸ் ஜெய்பீர் சிங். ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை தவறிவிட்டார்.
இருந்தபோதும் இந்த ஆண்டும் முயற்சித்தார் பிரின்ஸ் ஜெய்பீர் சிங். ஐஐடிக்கான நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 25,894-வது இடத்தையும் எஸ்.சி. கோட்டாவில் 864-வது இடத்தையும் பிரின்ஸ் பெற்றார். மும்பை ஐ.ஐ.டியில் சிவில் இன்ஜினியரிங் படிப்புக்கும் பிரின்ஸ் தேர்வானார்.

ரூ15,000 கட்ட முடியாமல் தவிப்பு
மும்பை ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கை கட்டணமான ரூ15,000-த்தை அக்டோபர் 27-ந் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் பிரின்ஸால் சேர்க்கை கட்டணமான ரூ15,000 கையில் இல்லை. இதனால் அலைந்து திரிந்து சகோதரிகளுடன் உதவியுடன் ரூ15,000-த்தை ஆன்லைனில் கட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் தொழில்நுட்ப சிக்கலால் பிரின்ஸால் ஆன்லைனில் பணத்தை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியவில்லை.

லேட்டானதால் சீட் மறுப்பு
இதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கையை நடத்திய காரக்பூர் ஐ.ஐ.டி.க்கும் சென்று முயற்சித்துப் பார்த்தார். ஆனால் உரிய காலத்தில் சேர்க்கை கட்டணம் செலுத்தாததால் மாணவர் பிரின்ஸின் மும்பை ஐ.ஐ.டி.யில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. தமது நிலைமையை சுட்டிக்காட்டி மும்பை உயர்நீதிமன்றத்திலும் பிரின்ஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மாணவர் பிரின்ஸ் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இம்மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, இந்த வழக்கை மனிதாபிமானத்துடனேயே அணுக வேண்டும். சேர்க்கை கட்டணத்தை செலுத்த தாமதம் ஆகிவிட்டதாலேயே தலித் மாணவர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது மிகப் பெரும் அநீதியாக அமைந்துவிடும். ஆகையால் தலித் மாணவருக்காக ஒரு இடத்தை மும்பை ஐ.ஐ.டி. உருவாக்கித் தர வேண்டும். ஏற்கனவே ஐ.ஐ.டியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவும் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர் பிரின்ஸ், ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்பது என் கனவு. பாதுகாப்பு துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். இந்தியாவின் பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்த பிரச்சனையில் எங்களது வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உச்சநீதிமன்றம்தான் எங்களது கடைசி ஆகப் பெரும் நம்பிக்கையாக இருந்தது. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றார். தலித் மாணவரின் தந்தை டெல்லி போலீசில் இளநிலை அலுவலராக உள்ளார். அவருக்கு 5 சகோதரிகள் உள்ளனர். மாணவர் பிரின்ஸ்தான் அவரது குடும்பத்தில் ஐ.ஐ.டியில் படிக்கப் போகும் முதல் நபர். பிரின்ஸின் தூரத்து உறவினர் ஒருவர் பாட்னா ஐ.ஐ.டி.யில் படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications