பாரத் பந்த்.. வடமாநிலங்களில் ரயில், சாலை மறியல்.. விஸ்வரூபம் எடுத்த விவசாயிகள் போராட்டம்!
டெல்லி: கடந்த 4 மாதங்களாக விவசாய போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுக்க பாரத் பந்த் நடந்து வருகிறது. விவசாய சங்கங்கள் சார்பாக பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, போராட்டங்கள் நடந்து வருகிறது.
100 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நடக்கும் என்று விவசாய சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த 4 மாதங்களாக விவசாய போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுக்க பாரத் பந்த் நடந்து வருகிறது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரத் பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் சங்கம் தவிர லாரி ஓட்டுனர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கமும் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பல்வேறு சீக்கிய அமைப்புகளும் பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது
பாரத் பந்தை தொடர்ந்து வடமாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமாக ஹரியானா, பஞ்சாப்பில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு பல இடங்களில் ரயில்கள் , பேருந்துகள் மறிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக பஞ்சாப்பில் பல்வேறு ரயில் நிலையங்களில் விவசாயிகள் ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் காரணமாக ஒடிசாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடக்காத தென்னிந்திய மாநிலங்களில் இந்த பந்த் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.