திறக்கப்படும் பள்ளிகள்..குழந்தைகளுக்கு வேக்சின் போட 2022வரை காத்திருக்க வேண்டுமா? அரசு முக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவில் இணை நோய் உள்ள சிறார்களுக்கு வேக்சின் பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என்றும் அதன் பிறகு அடுத்தாண்டு தான், ஆரோக்கியமாக உள்ள சிறார்களுக்கு வேக்சின் போடப்படும் என அரசின் வல்லுநர் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேக்சின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அதேநேரம் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதனால் வளரும் நாடுகளில் மட்டுமே வேக்சின் பணிகள் விரைவாக நடக்கிறது. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் படிப்படியாகவே வேக்சின் போடும் பணிகள் நடைபெறுகிறது.

வேக்சின் பணிகள்
உலகிலேயே அதிகபட்ச வேக்சின்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள், பின்னர் படிப்படியாக 18+ அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதேநேரம் தற்போது வரை 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படவில்லை.

சைடஸ் கேடிலா வேக்சின்
இந்தச் சூழலில் கடந்த வாரம் 3 டோஸாக செலுத்த வேண்டிய சைடஸ் கேடிலா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. உலகிலேயே டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் ஆன இதை 12 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தலாம். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் மத்திய அரசு சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகளை மேற்கொள்ள என்ன மாதிரியான திட்டத்தை வைத்துள்ளது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

யாருக்கு முன்னுரிமை
இந்நிலையில், சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் குறித்து மத்திய அரசின் வல்லுநர் குழு தலைவர் டாக்டர் என்.கே அரோரா பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டில் 18+ வயதினருக்கு வேக்சின் பணிகள் எப்படி படிப்படியாக அமல்படுத்தப்பட்டதோ, சிறார்களுக்கான வேக்சின் பணிகளும் அதேபோல செயல்படுத்தப்படும். முதலில் இணை நோய் உள்ள சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்படும்.

என்ன காரணம்
இணை நோய் உள்ள சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 முதல் 17 வயதுடைய குழந்தைகளில் 1% பேருக்கு இணை நோய்கள் உள்ளன. அதாவது 12 கோடி பேருக்கு இணை நோய்கள் உள்ளன. 2 வயதுக்கு மேல் உள்ள சிறார்களில் மொத்தம் 44 கோடி பேருக்கு இணை நோய்கள் உள்ளன. இத்தனை கோடி பேருக்கு உடனடியாக வேக்சின் போட்டு முடிக்க முடியாது. இதன் காரணமாகவே படிப்படியாக வேக்சின்களை போடும் திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆரோக்கியமான குழந்தைகள்
ஆரோக்கியமாக உள்ள சிறார்களுக்கு அதன் பின்னரே வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும். அதாவது 2022ஆம் ஆண்டில் முதல் காலாண்டிலேயே சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும். வரும் அக்டோபர் மாதம் முதல் இணை நோய் உள்ள சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்கும். சிறார்களிடையே கோவாக்சின் சோதனையும் நடைபெற்று வருகிறது. அதுவும் வரும் அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications