நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்கவும் பதிலளிக்கவும் மத்திய அரசு தயார்: பிரதமர் மோடி
டெல்லி: நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் உரிய பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத் தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும்; லக்கிம்பூர் படுகொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என சபையின் நடுவே எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர்.இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இறையன்பு எச்சரித்தும் இன்று வரை தொடரலாமா?.. முதல்வரே நடவடிக்கை எடுங்க.. அறப்போர் இயக்கம் பரபர ட்வீட்
பிரதமர் மோடி பிரஸ் மீட்
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு தற்போது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. இந்த தருணத்தில் நடைபெறும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும்.
கேள்விகளுக்கு பதில் தர தயார்
நாடாளுமன்றத்தில் சபைகளின் மாண்புகளையும் சபாநாயகரின் மாண்புகளையும் மதித்து நடக்கவேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது; எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
ஓமிக்ரான் எச்சரிக்கை
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பது, இடையூறு செய்வது உள்ளிட்டவைகளால் நேரத்தை நாம் வீணடிக்கக் கூடாது. நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
திரிணாமுல் விமர்சனம்
பிரதமர் மோடியின் இந்த கருத்தை திரிணாமுல் எம்.பி. டெரைக் ஓ பிரைன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெரைக் ஓ பிரைன், கடந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பெகாசஸ் உள்ளிட்டவைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்தது மத்திய அரசு. பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதி வெற்று வாக்குறுதி என கூறியிருக்கிறார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த கேபினட் அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதேபோல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார்.