நாடே கொண்டாடும் நால்வர் தூக்கு.. தண்டனையை நிறைவேற்றிய ஹேங்மேன் குறித்த பரபரப்பு தகவல்கள்
டெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை நாடே கொண்டாடி வரும் நிலையில் அதை நிறைவேற்றிய ஹேங்க்மேன் பற்றிய பரபரப்பு தகவல்கள் இதோ..
2012-ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்னொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 4 குற்றவாளிகளான அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிறைச் சாலை
இதன் பிறகு திகார் சிறையின் வாயில் முன் திரண்டிருந்த ஏராளமானோர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நாட்டு மக்களின் இந்த சந்தோஷத்திற்கு முக்கிய காரணமானவர் ஹேங்மேன் பவன் ஜல்லாட். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர். இவருக்கு 57 வயதாகிறது. திகார் சிறையில் ஹேங்மேன் பதவிக்கு ஆள் இல்லாததால் மற்ற சிறைச்சாலைகளிலிருந்து ஆட்சேர்ப்பு பணியில் திகார் சிறை நிர்வாகம் ஈடுபட்டது.

ஒத்திகை
மாபாதகச் செயல்களை செய்த 4 பேரையும் தூக்கிலிட தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள காவலர்கள் விண்ணப்பித்தனர். அதிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சிறையைச் சேர்ந்த பவன் ஜல்லாட் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாதச் சம்பளமாக ரூ 3000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்றே திகார் சிறைக்கு வந்துவிட்ட பவன் ஒத்திகையை பார்த்துவிட்டு அதிகாலை 3.30 மணிக்கு எழுந்தார்.

80 ஆயிரம் ஊதியம்
பின்னர் குளித்துவிட்டு தூக்கிலிடுவதற்காக தயார் ஆனார். அவரிடம் 8 தூக்குக் கயிறுகள் கொடுக்கப்பட்டன. அதிலிருந்து 4 கயிறுகளை பவன் தேர்வு செய்தார். ஒருவருக்கு ரூ 20 ஆயிரம் வீதம் 4 பேரை தூக்கிலிடுவதற்கு ரூ 80 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து பவன் கூறுகையில் எனது வாழ்க்கையில் முதல்முறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இதுதான்.

அரசு வேலைவாய்ப்பு
இந்த 4 கயவர்களையும் தூக்கிலிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன். கடவுளுக்கும் திகார் சிறைச் சாலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இவர் மீரட் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தில் 7 பேர் உள்ளனர். இவரது மகனுக்கு இவரை போல் தூக்கு மேடைகளில் பணிபுரிய விருப்பம் இல்லையாம். அதனால் அவர் அரசு வேலைவாய்ப்புகளுக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications