ஓரினச் சேர்க்கை உறவு முறை ஓகேதான்; ஆனால் திருமணம் எல்லாம் 'நோ சான்ஸ்' - பாஜக எம்.பி. சுஷில் மோடி
டெல்லி: "ஓரினச் சேர்க்கை என்பது உறவோடு நின்றுகொண்டால் பிரச்சினை இல்லை.. ஆனால் திருமணம் செய்வதை எல்லாமே ஏற்கவே முடியாது" என தடலாடியாக கூறியுள்ளார் பாஜக எம்.பி. சுஷில் மோடி.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளை சுதந்திரம் என்ற பெயரில் அனுமதித்து இந்தியாவை அமெரிக்கா போன்று ஆக்கி விடாதீர்கள் எனவும் அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் பரபர தீர்ப்பு
ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை என்பது இந்தியாவில் குற்றமாக கருதப்பட்டு வந்தது. பின்னர், அந்த பாலுணர்வை கொண்டவர்கள் நடத்திய தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தியதன் விளைவாக கடந்த 2018-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், ஓரினச்சேர்க்கை திருமணத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

"திருமணத்துக்கும் சட்ட அங்கீகாரம்"
இதனிடையே, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி வழக்கறிஞர் நுபுர் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோல, பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"2 நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது"
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வியெழுப்பபட்டது. இதற்கு பதிலளித்து சுஷில் மோடி கூறுகையில், "ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது சமூக கட்டமைப்பை உடைக்கும் செயல். இந்த விவகாரம் 2 நீதிபதிகள் தீர்மானிப்பது அல்ல. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்றார்.

"அமெரிக்காவாக மாற்றாதீர்கள்"
இதனைத் தொடர்ந்து, ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்று, இதுதொடர்பாக சுஷில் குமார் மோடியிடம் நேற்று இரவு பேட்டியளித்தது. அப்போது பேசிய சுஷில் மோடி, "உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல எனக் கூறியிருக்கிறது. அதன்படி, ஓரினச் சேர்க்கை, ஒரு உறவு முறையோடு நின்று கொண்டால் பரவாயில்லை. ஆனால், ஓரினச் சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்கக் கூறுவது சரியல்ல. அப்படி செய்வதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. திருமணச் சட்டம், விவாகரத்து சட்டம், குழந்தைகள் தத்தெடுப்பு சட்டம் என அனைத்தையும் மாற்ற வேண்டும். எந்த சட்டமாக இருந்தாலும் அது இந்திய கலாச்சாரத்துக்கு ஒத்து வர வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்காவாக மாற்றி விடாதீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications