"ஓரினச் சேர்க்கையாளர்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தான்".. ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத்.. திடீர் பேச்சு
டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தான் என்றும், அவர்களுக்கான இடத்தை நாம் அளிக்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், மோகன் பாகவத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், நீண்டகாலமாக ஓரினச் சேர்க்கை உறவை கடுமையாக எதிர்த்து வந்த ஆர்எஸ்எஸ், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'சென்சிட்டிவ்' ஷிவமொக்காவுக்கு.. பறந்து வரும் மோகன் பகவத்.. கர்நாடகா போலீஸ் உச்சகட்ட 'அலர்ட்'
ஓரினச் சேர்க்கை திருமணம் - எதிர்க்கும் பாஜக
ஒருகாலத்தில் ஓரினச் சேர்க்கை என்பது இந்தியாவில் குற்றமாக கருதப்பட்டு வந்தது. பின்னர், அந்த பாலுணர்வை கொண்டவர்கள் நடத்திய தொடர் சட்டப்போராட்டத்தை நடத்தியதன் விளைவாக கடந்த 2018-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், ஓரினச்சேர்க்கை திருமணத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என மத்திய அரசு தீவிரமாக வாதாடி வருகிறது.
"காலம் காலமாக இருப்பதுதான்"
இந்த சூழலில்தான், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ஓரினச்சேர்க்கையை பெருங்குற்றமாக பார்க்கும் மனநிலையை நாம் கைவிட வேண்டும். மனிதர்கள் எப்போது தோன்றினார்களோ அப்பொழுதில் இருந்து ஓரினச்சேர்க்கை உறவும் இருக்கிறது. இதை நாம் எதிர்ப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
"அவர்கள் என்ன செய்வார்கள்?"
ஓரினச்சேர்க்கை உறவு முறைக்குள் அவர்கள் வேண்டுமென்றே செல்வது கிடையாது. அது அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றம். பாவம், அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? ஓரினச் சேர்க்கையாளர்களும் மனிதர்கள்தான். அவர்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தான். இது மிக சாதாரணமாக விஷயம். இதை யாரும் ஊதி பெரிதாக்க வேண்டாம். அவர்கள் வழியில் அவர்களை விட்டுவிடுவோம்.
"பார்வையை மாற்ற வேண்டும்"
ஓரினச்சேர்கையாளர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களுக்கென ஒரு தனி இடத்தை கொடுக்க வேண்டும். அதைவிட்டு அவர்களை திருத்துகிறோம் என்ற பெயரில் எந்த முயற்சிகளிலும் யாரும் ஈடுபட வேண்டாம். ஏனெனில் அது ஒருபோதும் பயனளிக்காது. அவர்களை தவறாக பார்ப்பதை விட்டுவிட்டு நமது பார்வையை மேற்கூறியவாறு நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.