டெல்லியில் பற்றி எரிந்த புகழ்பெற்ற மார்க்கெட்! பதறிய மக்கள்! களமிறக்கப்பட்ட 39 தீயணைப்பு வாகனங்கள்!
டெல்லி: டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கப்பார் மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 39 வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
டெல்லியில் சமீப காலமாக அடிக்கடி தீவிபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் டெல்லியில் முக்கிய இடமாக கரோல் பாக்கில் உள்ள கப்பார் மார்க்கெட்டில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இது அங்குள்ள அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பதறினர். இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாதை குறுகலாக இருந்ததால் தீயணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 39 வாகனங்கள் சேர்ந்து போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீயில் மொத்தம் 16க்கும் அதிகமான கடைகள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று டெல்லி ரோஹினி பகுதியில் மருத்துவமனையின் ஐசியூவில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்டதால் 64 வயது நோயாளி ஒருவர் இறந்ததார். அதற்கு முன்பு கடந்த மாதம் டெல்லி முன்ட்கா மெட்ரோரயில் நிலையம் அருகே 4 மாடி வணிக வளாகத்தில் தீவிபத்து ஏறபட்டது. இதில் 27 பேர் இறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications