கொரோனா போல பரவுமா மங்கி பாக்ஸ்? வேக்சின் உள்ளதா? இந்தியாவில் என்ன நிலை? ஐசிஎம்ஆர் முக்கிய விளக்கம்
டெல்லி: உலகெங்கும் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக ஐசிஎம்ஆர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கடந்த 2.5 ஆண்டுகளை கொரோனா வைரஸ் தான் நம்மை ஆக்கிரமித்து இருந்தது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டன.
வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகள் காரணமாக உலக நாடுகள் இப்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. மக்களுக்கும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
மீண்டும் வருகிறது தனிமைப்படுத்தும் விதி! முதல் நாடாக அறிவித்த பெல்ஜியம்.. காரணம் மங்கி பாக்ஸ்
மங்கி பாக்ஸ்
இந்தச் சூழலில் அடுத்த அதிர்ச்சியாக மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வித வைரஸ் பாதிப்பு வேகமாக உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டுமே பொதுவாகக் கண்டறியப்படும் இந்த மங்கி பாக்ஸ், இப்போது ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 12 நாடுகளில் பரவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 கேஸ்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர்
இது கொரோனா வைரசைப் போல அடுத்து ஒரு பொருந்தொற்றை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைராலஜி தலைவர் டாக்டர் நிவேதிதா குப்தா முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். உலகெங்கும் மங்கி பாஸ்க் பரவல் எப்படி உள்ளது என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, சாத்தியமான மதிப்பீடுகளைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
வேகமாக பரவுமா
இது குறித்து நிவேதா குப்தா மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவும் திறனைக் கொண்டிருந்தது. இது தான் அதில் பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆனால், இந்த மங்கி பாக்ஸ் வைரஸ் காட்டுத்தீ போலப் பரவாது. வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவ உடலில் இருந்து வெளிப்படும் பெரிய நீர்த்துளிகள் தேவைப்படுகின்றன. எனவே இது அதிகம் பரவாது.
புதிய வைரஸ் இல்லை
மேலும், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருடன் நேருக்கு நேர் தொடர்பு இருப்பவர்களுக்கு மட்டுமே இது பரவுகிறது. பல சந்தர்ப்பங்களில் இதற்குச் சாத்தியமில்லை. எனவே, அது கொரோனா போல வேகமாகப் பரவாது. மேலும், இந்த மங்கி பாக்ஸ் ஒரு புதிய வைரஸ். இவை சில ஆப்பிரிக்கப் பகுதிகளில் வழக்கமாகக் காணப்படும். மேலும், அவ்வப்போது வைரஸ் பரவல் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் என்ன நிலை
ஐசிஎம்ஆர் இந்த வைரசை exotic என்று பட்டியலிட்டுள்ளது. அதாவது இந்த வைரஸ் இந்தியாவில் இல்லை. இதைக் குறிக்கும் வகையில் தான் exotic என்று குறிப்பிட்டுள்ளோம். நாட்டில் இப்போது வரை சேகரிக்கப்படும் மாதிரிகள் அனைத்தும் புனேவில் சோதனைக்காக அனுப்பப்படும். இந்த சோதனைக் கூடத்தில் இருந்து வைரஸ் லீக்காக வாய்ப்புகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்துவது குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.
வேக்சின் இல்லை
தற்போதைய சூழலில் இந்த மங்கி பாக்ஸ் நோய்க்கான வேக்சின் நம்மிடம் இல்லை. பெரியம்மைக்கு எதிராக வேக்சின் போட்டவர்கள் மங்கி பாக்ஸ் தொற்றில் இருந்தும் பாதுகாப்பாகவே இருப்பார்கள். சர்வதேச சூழ்நிலையைக் கண்காணிப்பது, விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் சோதனையை விரிவுபடுத்துவது மட்டுமே இப்போது நாம் செய்யக் கூடியது" என்றார். மத்திய அரசும் மங்கி பாக்ஸ் தொடர்பாக விரைவில் வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.