இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம்
டெல்லி: இந்தியாவில் இதுவரை 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.2 மடங்கும், பிரான்சை ஒப்பிடும்போது 12.5 மடங்கு அதிகம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் புள்ளி விவரங்களுடன் கூறினார்.
இந்தியாவில் கொரேனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா கொரோனா தடுப்பூசி செலுத்தியது, ஒமிக்ரானை கட்டுப்படுத்தியது ஆகியவற்றில் முன்னணியில் உள்ளதாக மத்திய அரசு பெருமையாக கூறியுள்ளது.

சிறந்த முறையில்...
இதுதொடர்பாக ‛வெபினார்' நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது: பிற நாடுகளை காட்டிலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை இந்தியா சிறந்த முறையில் கட்டுப்படுத்தி உள்ளது. முந்தைய கொரோனா அலையை காட்டிலும் ஆறுமடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட இந்தியா தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கட்டுப்படுத்தியது. இன்றும் கூட உலகில் 15 முதல் 17 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் பேர் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மொத்தம் 180 கோடி டோஸ்
இந்தியாவில் இதுவரை மொத்தம் 180 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.2 மடங்கும், பிரான்சை ஒப்பிடும்போது 12.5 மடங்கும் அதிகமாகும். இதில் 81 கோடி பேர் வரை 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.9 மடங்கும், பிரான்சை பொறுத்தமட்டில் 15.6 மடங்கும் அதிகமாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு சமம்
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.74 கோடி பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது அமெரிக்காவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது 2.96 மடங்கும், ரஷ்யாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது 6.71 மடங்கும் அதிகம். அதிகபட்சமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மட்டும் 2.50 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாகும்'' என்றார்.

சுகாதார பணியாளர்கள்...
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டவியா கூறுகையில், ‛‛ஒருநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இது கொரோனாவை கட்டுப்பட்டும் வகையில் தடுப்பூசி நடவடிக்கையை இந்தியா சரியான முறையில் கையாண்டதற்கான திறனை காட்டுகிறது. உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் கூட நாட்டில் தொடர்ச்சியாக சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என பெருமையாக கூறினார்












Click it and Unblock the Notifications