அபாய கட்டம்... தண்ணீர் பிரச்சனையில் சிக்கப்போகும் பெருநகரங்கள்... பட்டியல் வெளியீடு
Recommended Video
டெல்லி: தண்ணீர் பிரச்சனையில், இந்தியாவின் பெருநகரங்கள் தீவிரமான அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் நான்கு சதவீத நன்னீர் ஆதாரங்களே உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமான தண்ணீர் பிரச்சனையை நாடு சந்தித்து வருகிறது என்று அரசின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நாட்டின் 21 நகரங்களில் 2020ஆம் ஆண்டிற்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அதுமட்டுமின்றி, 2030ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் 40 சதவீத இந்தியர்களுக்கு குடிநீரே கிடைக்காத நிலை ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்தநிலையில், விரிஸ்க் மாப்லெகிராஃப்ட் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகளவில் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆபத்துள்ள நாடுகளில் இந்தியா 46-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் 20 மிகப்பெரிய நகரங்களில் டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத், இந்தூர் உள்ளிட்ட 11 நகரங்கள் தண்ணீர் பிரச்சனை அபாயத்தின் தீவிர கட்டத்தில் உள்ளதாகவும், 7 நகரங்கள் அதிக அபாயம் என்ற கட்டத்தில் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது.
அதிகரிக்கும் மக்கள் தொகைப் பெருக்கம், மழை பெய்யாமை, தொடர் வறட்சி, நீர்நிலைகளை மேம்படுத்தாமை உள்ளிட்டவை தண்ணீர் பிரச்சனைக்கு காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது. 2035-ல் சென்னையில் தற்போதுள்ள மக்கள் தொகையை விட 47 சதவீதமும், டெல்லியில் 52 சதவீதமும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. எனவே அதற்கேற்ப நீர் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2024ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதுமுள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சி உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.