மருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்
டெல்லி: நாடு முழுவதும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதலைக் கண்டித்து வரும் ஜூன் 18ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் நிரம்பின.
இந்த காலகட்டத்தில் மருத்துவர்களின் சேவை என்பது அளப்பரியது. தினசரி பல மணி நேரம் பணிபுரிந்து எண்ணற்ற உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
மருத்துவர்கள் மீது தாக்குதல்
இருப்பினும், நாட்டில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன. உத்தரப் பிரதேசம், அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'Save the Saviors' என்ற முழக்கத்துடன் வரும் ஜூன் 18ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்
இது குறித்து மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் வரும் ஜூன் 18ஆம் தேதி கருப்பு பேட்ஜ்கள், மாஸ்க்குகள், ரிப்பன்கள், சட்டைகள் அணிந்து பணிக்குச் செல்ல வேண்டும். நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், நாட்டிலுள்ள மருத்துவமனைகளைப் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
ராம்தேவ் சர்ச்சை
ஏற்கனவே யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்துக் கூறிய கருத்துகளை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது என்றும் கொரோனாவை விட அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் அவர் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முடிவுக்கு வந்த சர்ச்சை
இதற்குக் கண்டனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் தான் கூறிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் கடவுள் அனுப்பிய தூதர்கள் என்றும் ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறு காரணமாக அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்ல முடியாது என்று அவர் கூறியிருந்தார். இது இரு தரப்பிற்கும் நிலவிய மோதலை சற்றே குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது..