"ரெம்ப டேன்ஞர்!" அண்டார்டிக்காவில் திடீரென கொட்டிய மழை! மிரண்டு நின்ற ஆய்வாளர்கள்.. என்ன நடந்தது?
டெல்லி: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள அண்டார்டிக்காவுக்குச் சென்று இருந்தனர். கடந்த மார்ச் 17ஆம் தேதி அண்டார்டிக்காவில் ஆய்வை மேற்கொள்ள இந்த ஆய்வாளர்கள் குழு அர்ஜெண்டினாவில் இருந்து சென்று இருந்தது.
பருவநிலை குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரிட்டன் ஆய்வாளர் ராபர்ட் ஸ்வான் தலைமையில் '2041 க்ளைமேட்ஃபோர்ஸ் அண்டார்டிக்'என்ற திட்டத்தின் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் 39 நாடுகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பயணம் செய்தனர்.
அண்டார்டிக் பகுதியில் பருவநிலை மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் பல நேர்காணல்களுக்குப் பின்னரே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் அண்டார்டிக் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
26 இந்தியர்கள்
மொத்தம் 26 இந்தியர்கள் இந்த ஆய்வு பயணத்தில் இருந்தனர். அவர்களில் 18 பேர் இப்போது நாட்டிற்குத் திரும்பிவிட்டனர். இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் ஆய்வக தலைவர் ரோஜிதா சிங் கூறுகையில், "வெப்ப மயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடப்பதைப் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. இந்த பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட பனிக்கட்டி எத்தகைய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது.
அண்டார்டிக்காவில் மழை
நாங்கள் அங்கு இருந்த போது, ஒரு நாள் திடீரென பல மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து அண்டார்டிக் பகுதிக்குச் சென்று வரும் ஸ்வான் என்ற ஆய்வாளர், இது போலத் தொடர்ச்சியாக இத்தனை மணி நேரம் மழை பெய்வது அசாதாரணமானது என்றும், இது போன்ற மழை நிகழ்வுகள் அங்கு சில காலமாகவே அதிகரித்து வருவதாகவும் எங்களிடம் கூறினார். இங்குள்ள ஒரு தீவு பெரும்பாலான பனிக்கட்டியை ஏற்கனவே இழந்துவிட்டது. இந்த மாற்றங்கள் நம்மைச் சுற்றித் தான் நடக்கிறது. இப்போதும் நடக்கின்றன" என்றார்.
என்ன காரணம்
அண்டார்டிக்கா பகுதியில் பெரும்பாலும் மழை என்பது பனி வடிவில் தான் உள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட புவி வெப்ப மயமாதல் காரணமாக அண்டார்டிக்கா பகுதியில் மழை பொழிவு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது ஒரு எச்சரிக்கை அறிகுறி. இது உலகளவில் வானிலை முறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்குப் புவி வெப்பமடைதலே முக்கிய காரணம். வேகமாக உருகும் பனிக்கட்டிகளைக் காக்கத் துரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
உணவு சங்கிலி
இந்த அண்டார்டிக்கா பகுதியில் சிறிய வகை இறால் போன்ற உயிரினமான கிரில் என்பது அதிகம் காணப்படும். ஆனால் அதிகளவில் பனி உருகுவதால் இந்த இறால் வகையின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்த இறால் வகைகள் தான் அண்டார்டிக்காவில் உணவுச் சங்கிலியின் முதுகெலும்பாகவே உள்ளது. இதன் எண்ணிக்கை குறைந்தால், அது பெங்குவின், சீல், திமிங்கிலங்கள் உட்பட ஒட்டுமொத்த உணவு சங்கிலியில் அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம். நாம் எதுவும் செய்யாவிட்டால் இந்த வனவிலங்குகள் அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும் பனிக்கட்டியின் இழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கையை விரைவில் நாம் எடுக்க வேண்டும் என்றார் இந்தியா சார்பில் ஆய்வு செய்யச் சென்ற கர்நாடக ஆய்வாளர் டீப் ஜகதீப்.
வெப்ப நிலை
இது குறித்து மற்றொரு ஆய்வாளர் நாராயணசாமி கூறுகையில், "அண்டார்டிக்காவில் மழை பெய்து கொண்டிருந்தது. இதுவரை அப்படி ஒன்றை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெப்பநிலை குறைவாக இல்லை. இதை விட அங்குக் குளிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். கிரில் இறால் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெங்குவின்கள் அங்கும் அங்கும் சுற்றித் திரிகிறது. இதையெல்லாம் பார்க்கவே குழப்பமாக உள்ளது" என்றார்.
பூமியின் வெப்பம்
தொழிற் புரட்சி காலத்திற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இந்த பூமியின் வெப்பம் 1.2 டிகிரி வரை உயர்ந்துள்ளது. புவிவெப்ப மயமாதல் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க நாம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வில்லை என்றால் அண்டார்டிக்காவில் ஒரு காலத்தில் பனிக்கட்டிகள் இருந்தன என்று சொல்லும் நிலை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.