பிராமணர்களை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிர்ப்பு.. ஐஎஸ் அமைப்புடன் ஒப்பிடு..ஜேஎன்யூவில் பதற்றம்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு பிராமணர்களுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட நிலையில் தற்போது கம்யூனிஸ்ட்களை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. மாணவர் அமைப்பினர் இடையே முற்றும் மோதலால் பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (ஜேஎன்யூ) ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகம் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்கும் மாணவர்கள், அம்பேத்கரை பின்பற்றும் மாணவர்கள் என தனித்தனியா மாணவர்கள் செயல்பட்டு வருவது தான் சர்ச்சைகளுக்கு காரணமாகும்.

மாணவ அமைப்பினர் மோதல்
ஏனென்றால் இந்த மாணவர்கள் அமைப்பினர் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்து மோதல்கள் என்பது அடிதடி தகராறாக கூட உருமாறி இருக்கிறது. சிஏஏ எதிர்ப்பு, விடுதியில் உணவு பரிமாற்றம் உள்பட பல்வேறு விஷயங்களில் இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

பிராமணர்களுக்கு எதிராக வாசகம்
கடந்த புதன் கிழமை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பிராமணர்களுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. பல்கலைக்கழகத்தின் சுவர்களில் ‛‛பிராமணர்களே பல்கலைக்கழதக்தை விட்டு வெளியேறுங்கள். பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். இல்லாவிட்டால் ரத்தம் சிந்த வேண்டிய சூழல் ஏற்படும். நாங்கள் உங்களை பழிவாங்குவோம்'' என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக வாசகம்
இந்நிலையில் தான் தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கம்யூனிசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் இந்தியாவை விட்டு கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற வேண்டும். கம்யூனிஸ்ட்களும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வாதமமும் ஒன்று. கம்யூனிஸ்ட்டுகள் ஜிஹாதிகள் என எழுதப்பட்டுள்ளன. தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து ரக்சா தளத்தை சேர்ந்தவர்கள் எழுதி இருக்கலாம் என கம்யூனிஸ்ட் மாணவர்கள் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.

துணை வேந்தர் எச்சரிக்கை
இந்நிலையில் தான் குறிப்பிட்ட சமூகம், அமைப்பினரை மிரட்டும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் எழுதப்படும் வாசகங்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ பாண்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சகிக்கவே முடியாது
இதுதொடர்பாக அவர், ‛‛ஜேஎன்யூ அனைவருக்கும் சொந்தமான பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது. இதுபோன்ற நிகழ்வுகளை பொறுத்து கொள்ள முடியாது. பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் விரோதபோக்கு மற்றும் வன்முறை தொடர்பான விஷயங்களை சகித்து கொள்ளவே முடியாது'' என கூறியுள்ளார். மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications