கான்பூர் ரூ257 கோடியில் காமெடி:டார்கெட் அகிலேஷ் கட்சி புஷ்பராஜ் ஜெயின்- சிக்கியது பாஜக பியூஷ் ஜெயின்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வாசனை பொருட்கள் வியாபாரி வீட்டில் ரு257 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பது பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி ஆகியோர் சாடி உள்ளனர்.மேலும் இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயினுக்கு பதில் பாஜகவுடன் தொடர்பில் உள்ள பியூஷ் ஜெயின் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
கான்பூரில் வாசனைப் பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் வருமானவரித்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை இணைந்து அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை 120 மணிநேரம் நடைபெற்றது.
இச்சோதனையில் பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்து ரொக்கமாக ரூ257 கோடி பணம் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 23 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளியும் பியூஷ் ஜெயின் வீட்டில் சிக்கியது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இந்த ரெய்டு விவகாரம் மையப் பொருளாகி இருக்கிறது. கான்பூரில் பேசிய பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் பியூஷ் ஜெயினுக்கு தொடர்பிருக்கிறது. 2017-ம் ஆண்டு முன்னர் நடைபெற்ற ஊழல் வாசனை இப்போது ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச மக்களுக்கும் தெரிந்துவிட்டது என்றார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமாஜ்வாதி கட்சியின் பியூஷ் ஜெயின் ரூ257 கோடியுடன் பிடிபட்டார். இந்த பணம் எங்கிருந்து வந்தது என சமாஜ்வாகூறுவாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அகிலேஷ் மறுப்பு
ஆனால் பியூஷ் ஜெயினுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அகிலேஷ் யாதவ் மறுத்திருந்தார். மேலும் பியூஷ் ஜெயின் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் எந்த தொடர்புமே இல்லை. பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்து போய்விட்டது என்பதையே இந்த சோதனை காட்டுகிறது. பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ2,000 நோட்டுகள் யாரிடம் இருந்து வந்தது என விசாரணை அதிகாரிகள் தெரிவிப்பார்களா? எனவும் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருந்தார்.

புஷ்பராஜ் ஜெயின், பியூஷ் ஜெயின்
அத்துடன் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி.யாக இருக்கும் புஷ்பராஜ் ஜெயின் கடந்த மாதம்தான் வாசனை பொருட்கள் வியாபாரத்தை தொடங்கினார். தற்போது சிக்கிய பியூஷ் ஜெயின், பாஜகவுடன் தொடர்பில் உள்ளவர். பியூஷ் ஜெயினுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் தொடர்பு என கூறுவது அப்பட்டமான பொய். இதைவிட உலகத்தில் மிகப் பெரிய பொய் இருக்கவே முடியாது என்றும் கூறினார் அகிலேஷ் யாதவ்.

ப.சிதம்பரம் சாடல்
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரமும் கான்பூர் வியாபாரி வீட்டில் ரூ257 கோடி சிக்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கான்பூரில் ரூ257 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புஷ்பராஜ் ஜெயினுக்கு பதில் பியூஷ் ஜெயின் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டார்களோ? இந்த காமெடி இத்துடன் முடியாது. பாஜகவும் சமாஜ்வாதி கட்சியும் பரஸ்பரம் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். இன்னும் பல கதாபாத்திரங்கள் வெளியே வரும். கான்பூர் ரெய்டு விவகாரம் என்பது மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது என கூறியுள்ளார்.

ஓவைசி விமர்சனம்
மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி கூறுகையில், உ.பி.யில் ரொக்கப் பணம் கத்தை கத்தையாக கைப்பற்றப்பட்டிருக்கிறது. தமது பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது என்பதை இப்போதாவது பிரதமர் மோடி ஒப்புக் கொள்வாரா? மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு, குறு தொழில்களை சீரழித்துவிட்டது என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications