லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் மாலை நேரத்திற்கு மாற்றம் - கேள்வி நேரம் ரத்து
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: லோக்சபா மழைக்கால கூட்டத் தொடர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடர் மாலையில் நடைபெறுகிறது. முதல்நாள் செப்டம்பர் 14ஆம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அமலில் இருந்ததால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப் போனது. இந்த சூழலில் நான்காம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் வரும் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அதேசமயம் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீரோ ஹவர் அரை மணி நேரம் மட்டும் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் நடைபெறும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி காலையில் 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும். மறுநாள் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் செப்டம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை கூட்டதொடர் நடைபெறும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 1 மணி வரைக்கும் கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் உறுப்பினர்கள் கூடுவதை தவிர்க்கவே இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதிய தனி மனித இடைவெளியுடன் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு மழைக்கால கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு முதன்முறையாக பிற்பகலில் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.