பீதியில் இங்கேயும்... அங்கேயும்... ஓட வேண்டாம்... மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்..!
டெல்லி: ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைப்பதாகவும், இதனால் மக்கள் பீதியில் அங்கேயும், இங்கேயும் ஓட வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை என்றும் மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசி வீட்டிலேயே இருந்து நலம் பெறலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினாலே கொரோனா தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறார்.
தொழிற்சாலை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜனை சேமிப்பு டேங்கர்கள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள் மூலம் பயன்படுத்தி வருவதாக கூறிய அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஆக்சிஜன் தொடர்பான எந்தவொரு தகவலும் மிக முக்கியமானது எனக் கூறியுள்ளார்.
பொதுமக்கள் பீதியில் தாங்களாகவே தங்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாக நினைத்தால் அது சரியானது அல்ல என்றும் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே ஆக்சிஜன் குறைவு குறித்து அறிந்துகொள்வதற்காக ஆக்சிமீட்டர் கருவியை பொதுமக்கள் உபயோகப்படுத்தலாம் என்றும் நாளொன்றுக்கு மூன்று முறை வீதம் அதனை உபயோகித்து வீட்டில் இருந்தவாறே ஆக்சிஜன் அளவை கண்டறிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு மீதும் சுகாதாரத்துறை மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications