'உங்களால்தான் எனது மகள்களை படிக்கவைக்க முடிந்தது..' முஸ்லீம் பெண் கண்ணீர்.. ஆறுதல் கூறிய பிரதமர்
டெல்லி: உத்தரப் பிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடியை சந்தித்த முஸ்லீம் பெண் ஒருவர் பிரதமரின் திட்டங்கள் குறித்துப் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பிரதமரும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்,
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
ரிப்போர்ட் இருக்கு வேணுமா? காதால் கூட கேட்க முடியவில்லை.. கொதிக்கும் அன்னபூரணி.. என்ன சொன்னார்?
இதனிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளும் தலைமையிலான பாஜக அரசும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
உ.பி-இல் பிரதமர் மோடி
இதற்காகப் பிரதமர் மோடியே நேரடியாக உத்தரப் பிரதேசத்திற்குப் பல முறை சென்று வருகிறார். இதனிடையே கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். மேலும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் பயன் பெற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் பெண் ஒருவரின் பேச்சு தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
முத்தலாக்
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ள கித்வாய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபர்சானா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் முத்தலாக் முறையில் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகப் பிரதமரிடம் தெரிவித்த ஃபர்சானா, கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று, ஒரு சிறிய துரித உணவு கடையைத் தொடங்கி நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
பிரதமருடன் போட்டோ
மேலும், பிரதமர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் இதைத் தனது கடையில் மாட்டி வைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஃபர்சானா தழுதழுத்து கண்ணீர் விடத் தொடங்கினார். அப்போது பிரதமர் மோடி அவரது அவரை தட்டிக் கொடுத்து, சமாதானம் செய்தார்.
மகள்கள் படிப்பு
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஃபர்சானா, "உங்களால் தான் எனது இரண்டு மகள்களையும் என்னால் படிக்க வைக்க முடிகிறது. எனது மகள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் முத்தலாக் கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்றுவிட்டார். அப்போது நானும் எனது 2 பெண் குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். அப்போது நான் மோசமான நாட்களை எதிர்கொண்டேன். எனது மகள்களுக்கு வீடில்லை. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
நீங்கள் தான் காரணம்
முன்பு எம்பிராய்டரி வேலை செய்து வந்தேன். பின்னர் ஒரு உணவகத்தில் பணிபுரியும் போது தென்னிந்திய உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று, ஒரு சிறிய துரித உணவு கடையைத் தொடங்கி நடத்தி வருகிறேன். எனது குழந்தைகளை இப்போது என்னால் படிக்க வைக்க முடிகிறது. இதற்கு நீங்கள் தான் காரணம்" என்றார்.
பிரதமர் பேச்சு
அப்போது பேசிய பிரதமர் மோடி, "உங்கள் மகள்களைப் படிக்க வையுங்கள். அவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாறுவார்கள்" என்று குறிப்பிட்டார். முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்ற பர்வீன் என்ற பெண் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரது ஒன்பது மாத மகள் சித்ராவுடன் பிரதமர் மோடி விளையாடும் போட்டோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.