சாலைகளில் நடக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அதிரடி திட்டம்
டெல்லி: நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலார்கள் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில், உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து தொழிலாளர்களை ஆவணப்படுத்தவும், அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் 'தேசிய புலம்பெயர்ந்தோர் தகவல் அமைப்பு' என்ற இணையதளத்தை கொண்டு வந்துள்ளன.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைகளில் நடந்து ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு மீண்டும் ஒரு முறை மாநில அரசுகளுக்கு நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளது. ஏனெனில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் புதிய விதிகளின் படி மாவட்ட ஆட்சி தலைவர்களே பொறுப்பானவர்கள் ஆவர்.
மாநிலங்களுக்கு எழுதிய புதிய கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் பிரச்சினையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கு இந்த இணையதளத்தை பயன்படுத்துமாறு மத்திய உள்துறை செயலாளர் மாநிலங்களைக் கேட்டுள்ளார்.

புலம் பெயர்ந்தவர்கள்
அவர் அந்த கடிதத்தில் "கள அலுவலர்களுக்கு கூடுதல் வேலைகளை உருவாக்காமல் மாநிலங்களுக்கிடையில் விரைவான தகவல்தொடர்புக்கு இந்த போர்ட்டல் உதவும். இது தொடர்புத் தடமறிதல் போன்ற கூடுதல் நன்மைகளைக் கொண்டுள்ளது, இது கொரோனா வைரஸ் மீட்பு பணிகளில் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
ஷ்ராமிக் ரயில்களில் புலம்பெயர்ந்தோர் பயணிக்கவும், அவற்றைக் கண்காணிக்கவும் இந்த போர்டல் புலம் பெயர்ந்தவர்களின் ஆதார் மற்றும் மொபைல் விவரங்களை கேட்கிறது.

புதிய ரயில்கள்
4வது கட்ட ஊரடங்கில் உள்துறை அமைச்சக வழிகாட்டுதலில் புலம்பெயர்ந்தோர் மீதான கவனம் தொடர வாய்ப்புள்ளது. மாநிலங்களுக்கு அதிகமான ஷ்ராமிக் ரயில்கள் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அண்மையில் ட்வீட் செய்துள்ளார்.

பொறுப்பு யாருக்கு
உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களின் படி புலம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல அதிக ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் எனவே அப்படி செல்ல விரும்புவோருக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசு உதவும்
இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில். "பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை அட்டவணைப்படுத்தலாம், அதன்படி பேருந்துகளை ஏற்பாடு செய்யலாம். எத்தனை ரயில்கள் தேவை என்பதை அட்டவணைப்படுத்த மாநில வாரியாக தரவுகளைப் பயன்படுத்தலாம். மத்திய அரசு கடன் கொடுக்க தயாராக உள்ளது" என்றார்.

கட்டுப்பாடுகளில் தளர்வு
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் பயணிகளின் கட்டுப்பாடுகளுடன் கட்டுப்பாடற்ற மண்டலங்களில் ஆட்டோ மற்றும் பஸ் பயணத்தையும் திறக்கக்கூடும். பசுமை மண்டலங்களில் விமானப் பயணமும் பரிசீலிக்கப்படுகிறது. ஊரடங்கு மே 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஊரடங்கில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விலக்கு இல்லை.












Click it and Unblock the Notifications