நிர்பயா வழக்கு.. அக்சய் தாகூரின் கருணை மனுவையும் அதிரடியாக நிராகரித்தார் ஜனாதிபதி!
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரில் ஒருவரான அக்ஷய் தாகூரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
சக குற்றவாளி வினய் ஷர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கோவிந்த் கடந்த சனிக்கிழமை நிராகரித்தார். அடுத்த சில மணி நேரங்களில், மற்றொரு மரண தண்டனை கைதி அக்சய் தாகூர் அன்றே கருணை மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அக்சய் தாகூரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார்.
மரண தண்டனை வழங்கப்பட்ட ஒரு கைதிக்கான கடைசி விருப்பம் இந்திய குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை அனுப்பி வேண்டுகோள் வைக்கலாம். ஆனால் குடியரத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தால், மரணதண்டனை அடுத்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு நடத்தலாம் என்று சட்ட விதிகள் கூறுகின்றன.
ஆனால் நிர்பயா வழக்கில் வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் அக்ஷய் சிங் ஆகியோரின் மரண தண்டனை ஒன்றாக நடக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று கூறியுள்ளது,
மரணதண்டனை தனித்தனியாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் மனுவை டெல்லி நீதிமன்றம்இன்று நிராகரித்தது. இந்நிலையில் நான்காவது குற்றவாளியான பவன் குப்தா இன்னும் கருணை மனு கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. மற்ற மூன்றுபேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை சரியாக 15 நாட்கள் முடியும் வரை காத்திருந்து பவன் குப்தா கருணை மனு தாக்கல் செய்தால் குற்றவாளிகளை தூக்கிலிடுவது என்பது இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் ஆகும் நிலை ஏற்படும்.