“அன்றே” ஹிஜாபுக்கு ஆதரவாக பேச்சு.. தடையை நீக்கிய உச்சநீதிமன்ற நீதிபதி துலியாவின் சரமாரி கேள்விகள்
டெல்லி: கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில விதித்த தடை தொடரும் என அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்த நீதிபதி சுதன்ஷு துலியா இந்த வழக்கு விசாரணையின்போது தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பூணூல் தப்பில்ல.. ஏது மதசார்பின்மை? ஹிஜாப் தடை தொடரும் என்ற நீதிபதி குப்தாவின் பரபர கருத்துக்கள்
காரசார வாதம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்னணி வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
பனி குல்லா
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வாதாடினார். அவரிடம் நீதிபதி துலியா "தேவைப்பட்டால் கண்ணாடி அணிவது, பனி குல்லா அணிவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்க, வழக்கறிஞர் மேத்தா, அது மத அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை." என்றார்.
பொது ஒழுங்கு பிரச்சனை
உடனே நீதிபதி துலியா, "தொப்பி அல்லது பனி குல்லாவை ஒரே நிறத்தில் அணிய அனுமதிக்கும்போது ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது?" என்று கேட்டார். அது மத அடையாளத்தை வெளிப்படுத்தாவிட்டால் அணியலாம் என்றார் வழக்கறிஞர் மேத்தா. அப்போது நீதிபதி துலியா, அப்படியென்றால் இது பொது ஒழுங்கு பிரச்சனையா? என்று கேட்டார்.
சம வாய்ப்பு
மற்றொரு நாள் அமர்வில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் நட்ராஜிடம், "ஹிஜாப் தடை இது சட்டத்தின் அடிப்படையில் சம பாதுகாப்பு அளிக்கிறது என்கிறீர்களா? சட்டத்தின்படி சம பாதுகாப்பு வழங்குவதற்கு வேறு அர்த்தம் உள்ளது." என நீதிபதி துலியா கேள்வி எழுப்ப, வழக்கறிஞர் நட்ராஜ், "அரசு ஒற்றைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற மதசார்பற்ற நிறுவனங்களின் மீது யாரும் குறை சொல்ல முடியாது. இந்த காலத்திற்கு இது தேவை." என்றார்.
பள்ளி செல்வதை தடுக்கிறீர்கள்
இதனை கேட்ட நீதிபதி துலியா, "வேறு வார்த்தைகளில் சொல்லபோனால், தேசிய ஒருமைபாட்டை காரணமாக சொல்லி நீங்கள் அவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கிறீர்களா? மொத்தமாக பார்த்தால், யாராவது ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர முயன்றால் நீங்கள் விட மாட்டீர்கள். ஆமாவா? இல்லையா? நீங்கள் ஏன் நேரடி பதிலை அளிக்க மறுக்கிறீர்கள்." என கேள்வி எழுப்பினார்.
அடிப்படை உரிமை
அடுத்து ஹிஜாபுக்கு எதிராக வாதாட வந்த மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணியிடமும் நீதிபதி துலியா தன்னுடைய கேள்விகளை அடுக்கினார். "உங்கள் அடிப்படை உரிமை பள்ளிக்கு வெளியில் இருக்கும். பள்ளிக்குள் இருக்காது. அதானே? ஆசிரியர்களின் கருத்து என்னவாக இருக்கிறது.
பன்முகத்தன்மை
ஹிஜாப் பன்முகத் தன்மையை ஊக்குவிக்கிறது என்றும் ஒருவர் சொல்லலாம் தானே. மாணவர்களுக்கு கலாச்சார ரீதியாகவும் உணர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் மாணவர்கள் பன்முகத்தன்மை கொண்ட உலகை எதிர்கொள்வார்கள். சொல்லப்போனால் இவற்றை மதிப்பிடுவதற்கான வாய்ப்பு இது." என்றார்.