கொலை குற்றம் பதிவுசெய்ய வேண்டும்..தடுப்பூசி உற்பத்தியில் முழுதிறனை பயன்படுத்தவில்லை..ஐகோர்ட் காட்டம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தும், அதை முறையாகப் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது குறைந்துள்ளது. இதனால் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இன்னும் குறையவில்லை.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த பனசியா பயோடெக் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது நேரம் இல்லை
இந்த வழக்கு நீதிபதிகள் மன்மோகன், நஜ்மி வஜீரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்ததது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இதில் எதாவது பிரச்சினை வரும், விசாரணை நடக்கும், தணிக்கை நடைபெறும், என்று சில அதிகாரிகள் அஞ்சுகின்றனர். விசாரணைகள் மற்றும் தணிக்கைகளுக்கு அஞ்ச வேண்டிய நேரம் இது இல்லை. நாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
கொலைக் குற்றம்
இந்த நேரத்தில் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். அப்படி உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும். பனசியா பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். உற்பத்தி அதிகளவில் நடைபெறத் தொடங்கிவிட்டால், அது சரியான தரத்தில் இருக்கிறதா என மத்திய அரசு மேற்பார்வை செய்தால் போதும்" என்றார்.
மத்திய அரசு வாதம்
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பனசியா பயோடெக் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய இன்னும் அதிக காலம் ஆகும். இன்னும் அவர்கள் தேவையான அனுமதிகளைப் பெறவில்லை. அவர்களுக்குத் தேவையான நிதி இல்லை என்று சொல்லிவிட முடியாது. ரஷ்யா நேரடி முதலீட்டு அமைப்பு அவர்களுக்குத் தேவையான நிதியை அளித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இது தொடர்பாக எந்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது" என அவர் தெரிவித்தார்.
அனைத்து திறனையும் பயன்படுத்த வேண்டும்
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நிறைய வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உள்ளன, இதை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். நாட்டில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள அனைத்து திறனையும் நாம் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வருகின்றன. இந்த உள்கட்டமைப்புகள் அனைத்து அவர்களிடம் சென்றுவிடக் கூடாது.
விரைவாகச் செயல்பட வேண்டும்
தடுப்பூசி இல்லாததால் நாட்டில் பலர் உயிரிழந்தனர். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவாகச் செயல்பட வேண்டும். நாம் இப்போது மிகவும் இக்கட்டான, அவசர நிலையில் உள்ளோம். ஒரே தடுப்பூசி நாம் இறக்குமதி செய்கிறோம், அதற்குச் சோதனை தேவையில்லை என்று கூறுகிறார்கள். நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நம் நாட்டில் உற்பத்தி செய்யும் அதே தடுப்பூசியைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறுகிறீர்கள். இது ஏன் என்று புரியவில்லை, இதில் விரைவான நடவடிக்கை தேவை" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.