டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை.. நாடு முழுக்க மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு!
டெல்லி : தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச நாடுகளை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் நெருக்கடிக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ், பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனம்! தீர்த்தகிரி கவுண்டர் தீரன் சின்னமலையாக மாறியது எப்படி தெரியுமா?
வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை
குரங்கு அம்மை நோய் பரவத் தொடங்கியது முதலே, பாலியல் நடத்தை பற்றி பல சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அறிகுறிகள் உள்ள ஒருவருடன் உடலுறவு உட்பட எந்த வகையான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் இந்த வைரஸ் பரவக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த கொடிய நோய், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் குரங்கு அம்மை
இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஜூலை 14-ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர, கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி கேரளா திரும்பிய 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மத்திய அரசின் உயா்நிலை குழு
குரங்கு அம்மை தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரச பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் குரங்கு அம்மை நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும் நோய் பரவலை எதிர் கொள்வதற்கான வழிகாட்டுதலை அரசுக்கு அளிக்கவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் பணிக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவியை உருவாக்குதல், அத்தொற்றுக்கான தடுப்பூசிகளை ஆராய்வதற்கான வழி காட்டுதலையும் இக்குழு அரசுக்கு அளிக்கும்.
தீவிர கண்காணிப்பு
மேலும், குரங்கு அம்மை நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களிடம் இருந்தே அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனையொட்டி விமான நிலையங்கள், துறைமுகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு வருபவா்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அங்கு அதிகாரிகள் தொடா்ந்து விழிப்புடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை - ஆய்வு மையம்
குரங்கு அம்மை தொற்று பாதிப்பை உறுதிசெய்வதற்கான தலைமை ஆய்வகமாக புணே நகரில் உள்ள தேசிய தீநுண்மியியல் மையம் செயல்பட்டு வருகிறது. அதே வேளையில், குரங்கு அம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிய நாட்டில் உள்ள 15 ஆய்வகங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
Recommended Video
டெல்லியில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு
டெல்லியில் ஏற்கெனவே 2 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 35 வயது வெளிநாட்டவருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை 8 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.