"ஆபரேஷன் பனிச் சிறுத்தை.." கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்
டெல்லி: இந்திய-சீனா கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக, முதன் முறையாக மத்திய அரசு சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவப் படையினர் நேருக்கு நேராக கைகளாலும் கட்டைகளாலும் இரும்பு கம்பிகளால் தாக்கி கொண்டனர்.
சீன ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க முயன்றபோது இந்திய ராணுவத்தினரின் மீது திடீரென இப்படி ஒரு தாக்குதலை சீன ராணுவ வீரர்கள் முன்னெடுத்தனர்.
உயரிய விருதுகள்
இதில் மொத்தம் 20 வீரர்கள் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி அந்த நாடு இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, வீரதீர செயல்களுக்கான மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, சேனா மெடல்கள் வழங்கப்பட்டன. பீகார் 16ஆவது ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு கல்வான் பள்ளத்தாக்கு பாயிண்ட் நம்பர் 14ல் ரோந்து சுற்றி வந்தபோது சீன படையினரால் கொல்லப்பட்டார்.
ஆபரேஷன் பனிச் சிறுத்தை
சந்தோஷ்பாபுக்கு ராணுவ வீரர்களுக்கான மிக உயரிய வீர தீர விருது மகாவீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட விருதுடன் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் என்ன நடந்தது என்பது பற்றிய சில விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதைப் பாருங்கள்: கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கர்னல் சந்தோஷ் பாபு, ஆபரேஷன் பனி சிறுத்தை (Operation Snow Leopard) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
சரியான நேரத்தில் நடவடிக்கை
எதிரிப்படைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கண்காணிப்பு போஸ்ட் பகுதியில் அவர் பணியில் இருந்தார். எல்லையில் எதிரிகளின் நடமாட்டம் எப்படி இருக்கிறது என்பதை கண்காணித்து உடனுக்குடன் தனது படை வீரர்களை உஷார்ப் படுத்தி எதிரிகள் உள்ளே நுழைவதை தடுத்தார். அப்போது எதிரிகளால் கூர்மையான ஆயுதங்கள் போன்றவற்றால் வீசித் தாக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் சந்தோஷ் பாபு, வீரமரணம் அடைந்தார்.
கடைசி மூச்சு வரை
எதிரி ராணுவ வீரர்களின் திடீர் மூர்க்கத்தனமான இந்த தாக்குதலுக்கு மத்தியில் தனது உயிரை துச்சமென மதித்து, தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார் சந்தோஷ் பாபு. இந்திய ராணுவத்தைப் பின்வாங்கச் செய்யும் எதிரிகளின் முயற்சியை முறியடித்துள்ளார். கடுமையான காயங்களால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில் கூட தனது படைவீரர்களை எதிரிகளை முன்னேற விடாமல் தடுக்க செய்யும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கு
தனது கடைசி மூச்சு இருக்கும் வரை எதிரிகளின் தாக்குதலை தடுத்துள்ளார். தனது படை வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்து முன்னுதாரணமாக இருந்துள்ளார். இவ்வாறு பாதுகாப்புத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற விஷயங்களை மத்திய அரசு ஓரளவுக்கு விரிவாக இந்த விருது நிகழ்ச்சியின் மூலமாக விளக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனப் படைகளை தடுக்கும் முயற்சிக்கு பனி சிறுத்தை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.