பெகாசஸ் விவகாரம் : ஆறப்போட்ட பாஜக...அடங்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் - மக்களிடம் கொண்டு செல்ல திட்டம்
பெகாசஸ் உளவு விவகாரத்தை எதிர்கட்சிகள் விடுவதாக இல்லை. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஆளும் கட்சி தயாராக இல்லாவிட்டாலும் மக்களிடம் கொண்டு போக முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கி விட்டன எதிர்கட்சிகள்.
டெல்லி: எதிர்கட்சியினர் அமளி துமளி காரணமாக நாடாளுமன்றம் முன் கூட்டியே ஒத்திவைக்கப்பட்டாலும் பெகாசஸ் விவகாரத்தை எதிர்கட்சியினர் விடுவதாக இல்லை. ஆளும் பாஜக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இல்லாத காரணத்தால் ஊடகங்களின் முன்பு பேசுவதாக கூறி இன்று கையில் பதாகையுடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர் எதிர்கட்சி எம்பிக்கள்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் என்று 300க்கும் மேற்பட்டவர்களின் மொபைல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட சர்ச்சை கிளம்பியது.
பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி ரமணா, நாங்கள் விவாதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, இங்குதான் விவாதிக்க வேண்டும். வெளியில் விவாதிக்கக் கூடாது. அரசியல் தலைவர்கள் யாரும் வரம்பு மீறக் கூடாது என்று கூறினார். பெகாசஸ் தொடர்பாக வெளிவந்த செய்தி உண்மையென்றால் இந்த விவகாரம் தீவிரமானது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் யாரும் வழக்கு தொடரவில்லை என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

புயலாக மாறிய மழைக்கால கூட்டத்தொடர்
பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெரும் புயலை கிளம்பியது. வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தினசரியும் முழக்கமிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் சந்தித்து மூன்று முறை ஆலோசனை நடத்தினர். டிராக்டர் பேரணி, சைக்கிள் பேரணி நடத்தி எதிர்கட்சி எம்பிக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

அமளி துமளி
பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணைக்குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தினசரியும் முடங்கின. இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடைபெறவில்லை. அமளி துமளியால் அவை முடக்கப்பட்டாலும் மற்றொருபுறம் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

கூட்டத்தொடரில் நெருக்கடி
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தினமும் வலியுறுத்தின. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட்டதால் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ப. சிதம்பரம் ட்வீட்
இதனிடையே பெகாசஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது. அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடங்க மறுக்கும் எதிர்கட்சிகள்
பெகாசஸ் விவகாரத்தை மத்திய அரசு ஆறப்போட்டாலும் எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது. பின்னர்
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்கட்சியினர் கையில் பதாகையுடன் பேரணியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பேரணியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகள் பிரச்னை, பணவீக்கம், பெகாசஸ் விவகாரம் போன்றவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ரபேல் விவகாரம், ஜம்மு காஷ்மீர், பெகாசஸ் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராகவே இல்லை.

ஊடகங்கள் முன் பேசுகிறோம்
பெகாசஸ் பற்றி வாய் திறக்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி இல்லை. எதிர்க்கட்சிகளின் குரல் அடக்கப்படுகிறது. நாளுமன்றத்தில் இவை பற்றி விவாதிக்க மோடி அரசு விரும்பவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் ஊடகங்களின் முன்பாக இந்த விவகாரத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா குற்றச்சாட்டு
பேரணியில் பங்கேற்ற திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் மீது அவதூறு பரப்பும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடாளுமன்றம் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டு வைப்பது தவறானது. ஜனநாயகத்தின் குரல்வலை நெறிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Recommended Video

பாஜக எப்படி எதிர்கொள்ளும்
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்கள் அவையில் விவாதிக்க தயாராக இல்லாத பெகாசஸ் உளவு விவகாரத்தை எதிர்கட்சியினர் தற்போது மக்கள் முன்பாக கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். எதிர்கட்சியினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஆளும் பாஜக அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications