5 மாநில தேர்தல் இருக்கட்டும்.. ரேபரேலியில் பிரசாரத்தை தொடங்கப் போகும் மோடி
வரும் 16ம் தேதி ரேபரேலியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதாக கூறப்படுகிறது.
டெல்லி: எதனால் இந்த முடிவை எடுத்தாரோ தெரியவில்லை, வருகிற 16-ம் தேதியே ரேபரேலிக்கு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய போகிறாராம்.
இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தரப்பை வெகுவாகவே அசைத்துபோட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல பாஜக தலைவர்கள் மென்று விழுங்கி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஆனால் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர், எந்தவித கருத்தையும் கூற மறுத்துவிட்டார்.
பாஜக ஷாக்
இதனிடையே பிரதமர் ஒரு பக்கம் பாஜக தலைவர்களை அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒட்டுமொத்தமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஒரு பெரிய ஷாக் தான்.
தலைமை முடிவு
அதனால்தானோ என்னவோ, பிரதமர் மோடி என்னைக்கோ நடக்க போகிற தேர்தலுக்கு ரொம்ப சீக்கிரமாகவே ரெடி ஆகிவிட்டார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும், இந்த தேர்தல் முடிவுகள் காரணமாக, அதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது.
16-ம் தேதி
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியாகும். இங்குதான் வரும் 16-ம் தேதி மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்ன காரணம்?
அது மட்டும் இல்லை, ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பெட்டிகளை 16-ம் தேதி அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் உள்ளாராம். சோனியா காந்தி தொகுதியில் அவரைவிட முன்கூட்டியே பிரச்சாரத்திற்கு மோடி செல்லும் காரணம் என்னவாக இருக்கும்?