பீகார் டுவிஸ்ட்.. தடுமாறும் தாமரை! எழுச்சி பெற்ற காங்கிரஸால் எரிச்சலில் பாஜக - மோடி திடீர் ஆவேசம்
டெல்லி: காங்கிரஸின் எழுச்சிமும் பெரும் போராட்டங்கள், பீகார் ஆட்சி மாற்றம்போன்ற காரணங்களால் பாஜக தலைமை கடும் வருத்தத்தில் இருப்பதை பிரதமர் நரேந்திர மோடியின் நேற்றைய உரை கோடிட்டுக் காட்டியுள்ளது.
2 முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, 5 மாநில தேர்தல்களில் வெற்றி, மகாராஷ்டிராவில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் எல்லாம் வெற்றி என வெற்றி மீது வெற்றி வந்த என்னை சேரும் என்று பாட்டு பாடும் அளவுக்கு பாஜக தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்தது.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வலுவாக இல்லை என்று நினைத்து பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி எந்தவிதமான இடையூறும் இன்றி எடுத்து வந்தது. குறிப்பாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் போன்றவற்றின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
இலவசங்கள் மோசமானவை.. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சுமை.. பிரதமர் மோடி பேச்சு!
காங்கிரஸ்
அதுவரை மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்து வந்த காங்கிரஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை கைவைக்கத் தொடங்கியவுடன் தங்கள் பலத்தை காட்டி இருக்கிறது. ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்தபோதும், அதன் பின்னர் சோனியா காந்தியை விசாரித்தபோதும் வலுவான போராட்டங்களை அக்கட்சி முன்னெடுத்தது.
போராட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை நாடு தழுவிய போராட்டங்களை கையில் எடுத்தனர். இவ்வளவு நாளாக இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள் என்று கேட்கும் அளவுக்கு தனது பலத்தை மீண்டும் காட்டி மீண்டும் வந்துட்டோம்னு சொல்லு என்று மாஸ் காட்டியது காங்கிரஸ்.
நாடாளுமன்றம்
இதன் தொடர்ச்சியாக விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் விவாதிக்க வலியுறுத்தி தொடர் அமளியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக அவை நடவடிக்கைகள் முடங்க, வேறு வழியின்றி அரசும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. அதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆற்றிய உரைக்கு நிர்மலா சீதாராமன் கோபமடைந்தது சத்தம்போட்டது பெரும் விவாதப்பொருளானது.
விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரியேற்றம் போன்றவற்றை விடாத காங்கிரஸ் அதனை கண்டித்து கருப்பு உடை அணிந்து நாடு தழுவிய போராட்டத்தை கையில் எடுத்தது. 5 ஆம் தேதி காங்கிரஸ் நடத்திய போராட்டம் மாபெரும் கவனத்தை ஈர்த்தது. காங்கிரஸ் இன்னும் தொய்வடையவில்லை என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக நாட்டிற்கு காட்டியது.
பீகார் டுவிஸ்ட்
இதனால் பாஜக தலைமை கடும் அப்செட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் அவர்களே எதிர்பார்க்காத வகையில் பீகாரில் டுவிஸ்ட் கொடுத்தார் நிதீஷ் குமார். பாஜகவுடனான தொடர் மோதல்போக்கால் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஆட்சியமைத்து இருக்கிறார்.
பாஜக அதிர்ச்சி
ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகியது நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றும்போது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனாலும் பாஜக கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோபம்தான் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் வெளிப்பட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடி
அரியானா மாநிலம் பானிபட்டில் நேற்று பேசிய பிரதமர் மோடி, "அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றுபவர்களால், எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் பணியை மேற்கொண்டுள்ளது. பயிர்க்கழிவு பிரச்சனையை குறுக்கு வழியில் செல்பவர்கள் தீர்க்கவில்லை.
பிளாக் மேஜிக்
நம் நாட்டில் உள்ள சிலர் விரக்தியில் சிக்கியுள்ளனர். 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் காலக்கட்டத்தில், நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், அவர்கள் கருப்பு மேஜிக்கை நோக்கி செல்கின்றனர். ஆகஸ்ட் 5 அன்று நிகழ்ந்த சம்பவங்கள் இதுபோன்ற கருப்பு மேஜிக் மனப்பான்மையை பரப்பும் நிகழ்ச்சி." என்று காங்கிரஸ் நடத்திய கருப்பு உடை போராட்டத்தை விமர்சித்து அவர் பேசினார்.