“மன்னும் இமயமலை எங்கள் மலையே'.. மக்களவையில் பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர்..!
டெல்லி : "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிலர் தவறான பேச்சுகள் மூலமாக மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார்.
பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக தமிழகம் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது -மக்களவையில் பிரதமர் தாக்கு
தமிழகத்தில் பாஜக
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரவே முடியாது என கூறிய ராகுல் காந்திக்கு பதில் அளித்து பேசிய பிரதமர், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மக்கள் அனுமதிக்கவே இல்லை எனவும் பல மாநிலங்களில் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் அக்கட்சிக்கு அகங்காரம் குறையவில்லை என்றார். மேலும் 2014ஆம் ஆண்டிலேயே இன்னும் சிலர் பின்தங்கியுள்ளனர் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடினார்.
கண்ணை மூடி விமர்சனம்
1967ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை என பேசிய பிரதமர் எப்போதும் கண்களை மூடிக்கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது எனவும், புதிய லட்சியங்களை நாம் உருவாக்க வேண்டும் என கூறினார். யாரையும் தான் குறிப்பிட்டு பேசவில்லை எனவும் அவர்களாகவே தலையில் குல்லாவை தூக்கிப் போட்டுக் கொள்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியினரை பிரதமர் கிண்டல் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல்
கொரோனா தொற்றின்போது மும்பையிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வெளியேற காங்கிரஸ் இலவச ரயில் டிக்கெட்டுகளையும், டெல்லி அரசு பேருந்து வசதியையும் செய்து கொடுத்தது என பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதன் விளைவாகதான் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது என குற்றம் சாட்டினார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ததாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
பாரதியார் கவிதை
மேலும், "மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிலர் தவறான பேச்சுகள் மூலமாக மக்களை பிரித்தாள சூழ்ச்சி செய்வதாகவும், எவ்வளவு நினைத்தாலும் நாட்டு மக்களின் ஒற்றுமையை குலைக்க முடியாது, தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி சிலர் குளிர்காய நினைக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2020 ஆண்டு குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதே பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.