சும்மா சும்மா அபாய சங்கிலியை இழுக்காதீங்க! பைலட் வீரச்செயலை காட்டி ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
டெல்லி: ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் அதனால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. இதில் மீண்டும் ரயிலை இயக்க ஆற்று பாலத்தில் உயிரை பணயம் வைத்து லோகோ பைலட் ஒருவர் அபாய சங்கிலிக்கான லாக்கை விடுவிக்கிறார்.
Recommended Video
ரயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் அபாய சங்கிலி உள்ளது. அவசர காலத்தில் பயணிகள் இதை இழுத்தால் எச்சரிக்கையை உணர்ந்து பைலட் ரயிலை நிறுத்துவார்.
மேலும் சம்பந்தப்பட்ட பயணிக்கு தேவையான அவசர உதவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்தகைய இந்த வசதியை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

தேவையின்றி இழுக்கப்படும் சங்கிலிகள்
அதாவது பல சமயங்களில் இந்த அபாய சங்கிலிகள் தேவையின்றி இழுக்கப்படுகிறது. இவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பயணிகள், பைலட்டுகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில்வே அமைச்சகம் வீடியோ
இந்நிலையில் தான் ரயில்வே அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சும்மா சும்மா ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து பொதுமக்கள் இழுக்கக்கூடாது. இதனால் ஏற்படும் சிரமத்தை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை ரயில்வே அமைச்சகம் பதிவிட்டுள்ளது.

வீடியோவில் இருப்பது என்ன?
அந்த வீடியோவில் ஆற்றின் பாலத்தின் மீது சென்றபோது அபாயசங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நடுபாலத்தில் நிற்கிறது. அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ஏற்பட்ட லாக்கை விடுவித்தால் மட்டுமே ரயில் செல்ல முடியும். இதனால் பைலட் ரயிலின் சக்கரங்களுக்கு இடையே சிரமப்பட்டு நுழைந்து லாக்கை விடுவித்து வருகிறார். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து அந்த பைலட் இந்த செயலை வெற்றிகரமாக முடிக்கிறார்.

தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
மேலும் இந்த வீடியோ பதிவில் ரயில்வே அமைச்சகம், ‛‛ரயிலில் உள்ள அபாய சங்கிலியை தேவையின்றி இழுப்பது பல பேருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். மும்பை அருகே திட்வாலா-கடாவளி ரயில் நிலையங்களுக்கு இடையேயான ஆற்று பாலத்தின் மேல் தேவையின்றி அபாயசங்கிலி இழுக்கப்பட்டது. நின்ற ரயிலை மீண்டும் இயக்க உதவிய லோகோ பைலட் சதீஷ்குமார் ஆபத்தான முறையில் அபாய சங்கிலி லாக்கை விடுவிக்கிறார். பொதுமக்களே அபாயசங்கிலியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்'' என கூறியுள்ளது. இந்த சம்பவமானது நேற்று மும்பையில் இருந்து பீகார் மாநிலம் சப்ரா நோக்கி சென்ற கோடான் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications