நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்.. இன்று வெங்கையா நாயுடு.. கண்ணீர் விட்ட தலைவர்கள்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயபால் ரெட்டி நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரசை சேர்ந்தவர் என்றாலும், ஜெயபால் ரெட்டிக்கு, நாடு முழுக்க வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த சீனியர் தலைவர்கள் நண்பர்களாகும்.
பாஜக மூத்த தலைவரும், துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடுவும் அதில் ஒருவர்.
ராஜ்யசபாவில் இன்று ஜெயபால் ரெட்டிக்கான இரங்கல் தீர்மானம், நிறைவேற்றப்பட்டது. அப்போது வெங்கையா நாயுடு, இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். ஒரு கட்டத்தில் அவர் உடைந்து அழுதுவிட்டார். அவர் அருகே நின்ற அவை காவலர்கள் வெங்கையா நாயுடுவை தேற்றுவதை பார்க்க முடிந்தது. இதனால் ராஜ்யசபாவில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயபால் ரெட்டி ஒரு "சிறந்த பேச்சாளர் மற்றும் திறமையான நிர்வாகி" என்று புகழ்ந்த வெங்கையா நாயுடு, 1970 களில் ஆந்திர மாநில சட்டசபையில் ரெட்டியுடன் இரு முறை பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். சட்டமன்ற உறுப்பினராக ஜெயபால் ரெட்டியுடன் ஒரு வரிசை இருக்கையை பகிர்ந்து கொண்ட நாட்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அந்த நாட்களில், சட்டசபை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும். நாங்கள் இருவரும் காலை 7 மணிக்கு சந்தித்து காலை உணவு சாப்பிட்டபடி பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தோம். அவர் அறிவின் அளவு, புரிதலின் ஆழம் மற்றும் மொழிகளில் தேர்ச்சி வியப்பளிக்கும். அவர் உண்மையிலேயே முக்கியமானவர் "என்று வெங்கையா நாயுடு கூறினார்.
ஜெய்பால் ரெட்டி மரணம் தொடர்பாக கர்நாடக சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டபோது உடைந்து அழுதார். இன்று வெங்கையா நாயுடுவும் அழுதுள்ளார். ஆக மொத்தம், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளின் மனதை வென்றவர் ஜெயபால் ரெட்டி என்பது மட்டும் உண்மை.