ஓமிக்ரான்: சர்வதேச விமான சேவைகள் ஜனவரி 31 வரை நிறுத்திவைப்பு
டெல்லி: வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 நாடுகளுடன் இயக்கப்படும் சர்வதேச விமான சேவையில் மாற்றங்கள் இல்லை எனவும் DGCA தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு சர்வதேச அனைத்து சரக்கு விமானங்களுக்கும், அவசர தேவைகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனாவில் இருந்து 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் தொற்று இதுவரை 40 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் விமான சேவையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

ஜன.31 வரை சர்வதேச விமான சேவை தடை
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தியதால் இந்தியாவில் சர்வதேச விமானங்கள் சேவை மார்ச் 23ம் தேதி 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதை அடுத்து
இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது உருமாறிய கொரோனாவா ஓமிக்ரான் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியதால், வழக்கமான சர்வதேச விமான சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்துள்ளது.

கார்கோ விமானங்கள் செல்லும்
ஆனாலும் சுவிட்சர்லாந்து உள்பட 32 நாடுகளுக்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்களும், சரக்குகளை கையாளும் கார்கோ விமானங்கள் செல்வதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவசர காலங்களில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பிரத்யேக விமானங்கள் இயக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஓமிக்ரான், கொரோனா உள்ளிட்ட தொற்றுகள் பரவும் தன்மையை கூர்ந்து கவனித்து சாத்தியக் கூறுகள் இருந்தால் சர்வதே விமான சேவை தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என DGCA தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

கொரோனா நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 9,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மேலும் 159 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,74,111 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 3,40,97,388 ஆக உயர்ந்தது. தற்போது 94,742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications