சூரியனை நோக்கி எச்சில் துப்பினால் முகத்தில் தான் விழும்! பினராயி விஜயனுக்கு பதிலடி கொடுத்த ஆர்எஸ்எஸ்!
டெல்லி : ஆர்.எஸ்.எஸ்ஸை நோக்கி விரல் நீட்டுவது சூரியனில் எச்சில் துப்புவதற்கு சமம், மீறியும் துப்புவது உங்கள் முகத்தில் விழும் என நுபுர் சர்மா விவகாரத்தில் கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
முகம்மது நபி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்குப் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக நுபுர் சர்மா பாஜகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பல காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிரா மாநில போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "முகம்மது நபி குறித்த பாஜக செய்தித் தொடர்பாளரின் கீழ்த்தரமான கருத்துகளால், நமது மதிப்பிற்குரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை, உலகத்தின் முன் மீண்டும் ஒருமுறை இழிவுபடுத்தியுள்ளது சங்பரிவாரம். வகுப்புவாதத்துக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது." என்று பதிவிட்டிருந்தார்.

ஆர்எஸ்எஸ் பதில்
இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளர் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குமார், "நாட்டின் சில கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆர்எஸ்எஸ் மீது குற்றம் சாட்டுவதையும், அதற்கெடுத்தாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கி விரல்களை சுட்டிக்காட்டுவதையும் ஒரு நாகரீகமாக ஆக்கிவிட்டனர். ஆர்எஸ்எஸ் என்பது ஒட்டுமொத்த இந்தியாவும், உலகமும் அறிந்திருக்கும் , ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கேடர் அடிப்படையிலான அமைப்பு என கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் மீது பழி
மேலும்," அரசியல் தலைவர்களும் கட்சிகளும் தங்கள் தோல்விக்கு ஆர்எஸ்எஸ் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்ற அவர், "ஆர்.எஸ்.எஸ்ஸை நோக்கி விரல் நீட்டுவது சூரியனில் எச்சில் துப்புவதற்கு சமம், துப்புவது உங்கள் முகத்தில் விழும். உங்கள் தோல்விக்கு ஆர்எஸ்எஸ் மீது பழி போடுவதை நிறுத்துங்கள் என்று நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள், சில மதத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் கூறுவேன் என கடுமையாக தாக்கிப் பேசினார்.

நாட்டிற்கு மகிழ்ச்சி
மேலும், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக பேசியதற்காகவும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காகவும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இந்திரேஷ், "கலவரத்தில் சங் பரிவாரத்தின் பங்கு இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அரசியலமைப்புக்கு முரணாக பேசியதற்காகவும், வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான ஆத்திரமூட்டும் மற்றும் அவதூறான பேச்சுக்களைக் நிறுத்தினால் அது நாட்டிற்கு மகிழ்ச்சியாகவும், நன்மையாகவும் இருக்கும்,'' என்றார்.












Click it and Unblock the Notifications