பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பு காலக்கெடுவை ஆக. 31-க்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங், உமாபாரதி உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்றதால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.. இதனால் 2017-ம் ஆண்டு, இந்த வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 6 மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும்; அடுத்த 3 மாதங்களில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் லாக்டவுன் அமலில் இருந்ததால் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஶ்ரீ யாதவ் உச்சநீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications