சாமியார்களின் ஹரித்வார் வன்முறை பேச்சு மீது நடவடிக்கை கோரும் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற சாமியார்கள் சங்கமத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக நடவடிக்கை எடுக்க கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
ஹரித்வாரில் சாமியார்கள் அமைப்பான அகாடாக்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்; இஸ்லாமியர்களை இனச்சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும். இந்துக்களைப் பாதுகாக்க ஒரு பிரபாகரன் உருவாக வேண்டும் என சாமியார்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தனர். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்தது.
இப்பேச்சுகளுக்காக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தின் பொதுநலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இப்பேச்சுகள் குறித்து விசாரிக்க உத்தரகாண்ட் மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. மேலும் இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 2 முதல் தகவல் அறிக்கைகளையும் உத்தரகாண்ட் போலீஸ் பதிவு செய்துள்ளது. மொத்தம் 10 பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ஹரித்வார் வன்முறை பேச்சுகள் தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இம்மனுவை விசாரிக்கிறது.