சீண்டும் சீனா.. நாடாளுமன்றத்தில் வெடிக்கும் எல்லை மோதல்.. மோடி மௌனம் ஏன்? விளாசும் காங்கிரஸ்
டெல்லி: சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சீனா இந்தியாவின் நிலப்பரப்புகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் லடாக்கின் 'டெப்சாங்' பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததாக உளவுத்துறை அறிக்கைகள் வெளியாகின.
இதனையடுத்து தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்புக்கு முயன்றிருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துவிட்டது.

காங்கிரஸ்
ஆனால் இந்த போராட்டத்தில் இந்திய ராணுவம் தரப்பில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் விரிவாக விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே கூறுகையில், "இந்திய வீரர்களை சீன ராணுவம் மீண்டும் ஒருமுறை சீண்டி பார்த்திருக்கிறது. இதற்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பாக போராடி இருக்கிறார்கள். இதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது. தேச பாதுகாப்பு விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம். இதனை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் 2020 முதல் LACக்கு அருகில் உள்ள இடங்களில் சீனா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு விரிவாக பேச வேண்டும்.

மத்திய அரசு மௌனம்
இந்த பிரச்னையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நமது வீரர்களின் தியாகத்திற்கும், வீரத்திற்கும் நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார். அதேபோல கட்சியின் தகவல் தொடர்புத்துறை செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், எல்லை பிரச்னை விவகாரத்தில் தூக்கத்தில் இருக்கும் மத்திய அரசை காங்கிரஸ் எழுப்ப தொடர்ந்து முயன்று வருவதாகவும் ஆனால் அரசு தனது அரசியல் இமேஜை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு தொடர்ந்து மௌனமாகவே இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி இமேஜ்
மேலும், "எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். நமது வீரர்களின் துணிச்சலை கண்டு நாங்கள் பெருமிதம் அடைகிறோம். நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. ஆனால் மோடி ஜி தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். LACல் சீனாவின் முன்னேற்றம் கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரியும் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ஆக இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை பெரியதாக வெடிக்க இருக்கிறது.

பிரச்னை
இதனை மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது? என்பது கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது. ஏனெனில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. இவ்வாறு இருக்கையில் இதற்கு ஏற்றாற்போல எல்லையில் மற்றொரு பிரச்னை உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னதாக கிழக்கு லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications