லேசாக உயர்ந்த கேஸ்கள்.. குரங்கு அம்மை தொற்றை தடுக்க தீவிரம்! சிறப்பு குழு அமைக்க மத்திய அரசு முடிவு!
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றை தடுக்கும் வகையில், சிறப்பு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சர்வதேச நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் பாதிப்பு மற்றும் உயிர் பலிகளுக்கு ஆளாக்கிய கொரோனாவுக்கு அடுத்தபடியாக மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது.
Recommended Video
குரங்கு அம்மை நோய் பரவத்தொடங்கியது முதலே, பாலியல் நடத்தை பற்றி பல சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. அறிகுறிகள் உள்ள ஒருவருடன் உடலுறவு உட்பட எந்த வகையான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் இந்த வைரஸ் பரவக்கூடும் எனக்கூறப்படுகிறது.
இந்தியாவிலும் இந்த நோய் நுழைந்து கேரளாவில் 3 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த நோயின் அறிகுறிகள் சின்னம்மை நோயாளிகளுக்கு கடந்த காலங்களில் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்று இருக்கும். இந்த நோய் அறிகுறிகள் 2 முதல் நான்கு வாரங்கள் வரை வழக்கமாக இருக்கும். காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, இருமல், தோல் தடிப்பு போன்றவை காணப்படும்.
நோயாளிகளை தனிமைப்படுத்தும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா், தனி காற்றோட்ட வசதியுடன் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட வேண்டும். அவா் மூன்று அடுக்கு மூகக் கவசத்தை அணிய வேண்டும்.
அவரது தோலில் உள்ள புண்கள் பிறருக்கு பரவாமல் இருக்கும் வகையில், நன்கு மூடப்பட்டு இருக்க வேண்டும். தோளில் உள்ள புண்கள் குணமடையும் வரை, அவா் தொடா்ந்து தனிமையில் வைக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, டெல்லியில் மத்திய அரசின் உயர் மட்ட அளவிலான கூட்டம் ஆலோசனை நடத்தியது. அதில் குரங்கு அம்மையை கண்டறிவதற்கான வசதிகளை விரிவுபடுத்தவும், நோய்க்கான தடுப்பூசிகள் தொடர்பான வளர்ந்து வரும் போக்குகளை ஆராயவும், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகவும் குரங்கு அம்மைக்கான சிறப்பு பணிக்குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பணிக்குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications