கொரோனாவா.. அப்படின்னா.. ஊரடங்கு தளர்த்தியதும்.. ஹரித்வாரில் குளிக்க கூட்டமோ கூட்டம்
டெல்லி: ஹரித்வாரின் ஹர் கி பவுரி காட் பகுதியில் பக்தர்கள் அதிக அளவுக்கு கூடியுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசோரி பகுதியிலுள்ள கெம்ப்டி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்த போட்டோ வெளியாகி கடும் கண்டனங்களை பெற்ற நிலையில், இப்போது இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிந்தபடி இருக்கிறார்கள். எனவே கொரோனா நெறிமுறைகள் அங்கு பின்பற்றப்படுவதில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடத்த அனுமதித்ததுதான் கொரோனா 2வது அலை வேகமாக பரவ காரணம் என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஹர் கி பவுரி காட் பகுதியில் பக்தர்களுக்கு அதிக அளவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை உணர்வு
"நாங்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்ததைப் போல உணர்கிறோம். இங்கு நிறைய கூட்டம் உள்ளது. கொரோனாவைப் பற்றி நாங்கள் பயப்படவில்லை. 3வது அலைக்கு முன்பு நாங்கள் இங்கு வர நினைத்து வந்துள்ளோம்" என்று ஒரு சுற்றுலாப் பயணி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

வைரஸ் பரவ வாய்ப்பு
நைனிடால் உயர்நீதிமன்றம் புதன்கிழமை வார இறுதி நாட்களில் லாக்டவுனை கடுமையாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது நினைவிருக்கலாம். "சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தில் மோசமான டெல்டா பிளஸ் வைரசை பரப்ப வாய்ப்பு உள்ளது" என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

கப்பா வைரஸ்
டெல்டா தவிர, உத்தரபிரதேசத்தில் கப்பா என்ற உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் தொடர்பான இரண்டு கேஸ்கள் உத்தரகண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வேரியண்ட் திரிபுராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா நிலவரம்
150 மாதிரிகளில் 90 க்கும் மேற்பட்ட மாதிரிகள் அங்கு டெல்டா பிளஸ் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், மலைவாசஸ்தலத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் வார இறுதிகளில் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு நைனிடால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications